முகப்பு
செய்திகள்

யோ யோ தேர்வில் தேறினால் மட்டுமே இந்திய அணிக்குத் தேர்வாக முடியும்: பிசிசிஐ

இந்திய அணி, உடற்தகுதியில் எந்தளவுக்குத் தீவிரமாக உள்ளது என்பதற்கு இதைவிட ஒரு நல்ல உதாரணம் இருக்கமுடியாது...

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

இந்திய அணி, உடற்தகுதியில் எந்தளவுக்குத் தீவிரமாக உள்ளது என்பதற்கு இதைவிட ஒரு நல்ல உதாரணம் இருக்கமுடியாது.

இந்திய அணிக்குத் தேர்வு பெற விரும்பும் எந்த ஒரு வீரரும் யோ யோ என்கிற பரிசோதனையில் குறிப்பிட்ட அளவை எட்டவேண்டும் என்று பிசிசிஐ தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

கேப்டன், பயிற்சியாளர், தேர்வுக்குழுத் தலைவர் மற்றும் இந்திய அணியுடன் தொடர்புடைய மற்ற குழுவினர் என அனைவரும் இந்திய அணியில் விளையாட ஒரு வரைமுறையை உருவாக்கியுள்ளார்கள். இதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் சலுகையும் கிடையாது. யோ யோ தேர்வில் குறிப்பிட்ட அளவை (16.1) எட்டும் வீரர்களே இந்திய அணிக்குத் தேர்வாக முடியும். இதை எட்டமுடியாத வீரர்களுக்குத் கால அவகாசம் அளிக்கப்படும். பிறகு மீண்டும் இந்தப் பரிசோதனையை மேற்கொள்ளலாம். இலங்கைச் சுற்றுப்பயணத்துக்குத் தேர்வான வீரர்களும் ஆஸ்திரேலிய தொடரில் விளையாடும் வீரர்களும் யோ யோ சோதனையைக் கடந்துள்ளார்கள் என்று கூறியுள்ளார். 

ஒரு வீரர், குறிப்பிட்ட தூரத்தை எவ்வளவு வேகமாகக் கடக்கிறார் என்பதை அளவெடுக்கும் பரிசோதனை - யோ யோ தேர்வு. இதில் பங்குபெறும் வீரர்கள் 20 மீட்டர் இடைவெளியை ஓடிக் கடக்கவேண்டும். பீப் சத்தம் கொடுக்கப்படும்போது வேகத்தை அதிகரித்து 20 மீ. தூரத்தை விரைவில் கடக்க வேண்டும். இதுபோன்று தொடர்ச்சியாகச் செய்வதன் மூலம் ஒரு வீரருடைய முழு உடற்தகுதியை அறிந்துகொள்ளமுடியும். 20 மீட்டர் தூரத்தை வெவ்வேறு வேகத்தில் ஓடிக்கடப்பதால் இதற்கென மதிப்பெண் (20) வழங்கப்படும். 16.1 மதிப்பெண்ணைப் பெறும் வீரர் இந்திய அணிக்குத் தேர்வாகும் தகுதியை அடைவார்.

இந்த யோ யோ தேர்வில் யுவ்ராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் வெற்றி பெறவில்லை என்று செய்திகள் வெளிவந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.