டங்கல் படத்தினால் மல்யுத்தம் விளையாட்டில் கவனம் இழந்தேன்: கீதா போகத்
இந்தப் படம் இந்திய மல்யுத்த வீராங்கனைகளான கீதா போகத், பபிதா குமாரியின் வாழ்க்கை மற்றும்...
அமீர் கான், சாக்ஷி தன்வார், ஃபாத்திமா சனா, ஜைரா வாசிம், சன்யா மல்ஹோத்ரா நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவான படம் - டங்கல். 2016 டிசம்பரில் வெளியானது. இந்தப் படம் இந்திய மல்யுத்த வீராங்கனைகளான கீதா போகத், பபிதா குமாரியின் வாழ்க்கை மற்றும் அவர்களுடைய தந்தை மஹாவீர் சிங் போகத் ஆகியோரை மையமாக வைத்து உருவான படம். இந்தியாவில் மட்டுமல்லாமல் சீனாவிலும் வெளியாகி வசூலில் இந்தப் படம் சாதனை படைத்தது.
இந்நிலையில் டங்கல் படத்தினால் விளையாட்டில் கவனம் இழந்தேன் என்று கீதா போகத் கூறியுள்ளார். அவர் கூறியதாவது:
காயம் மற்றும் டங்கல் படம் காரணமாக மல்யுத்தம் விளையாட்டில் இரு வருடங்கள் ஈடுபடமுடியாமல் போனது. இதனால் கவனம் இழந்தேன். இப்போது மீண்டும் மல்யுத்தத்தில் கவனம் செலுத்துகிறேன். இந்திய அணியில் மீண்டும் இடம்பெற தீவிர முயற்சி எடுத்துவருகிறேன். விளையாட்டை விட்டு விலகியிருந்தால் அதற்குள் மீண்டும் வருவது மிகக்கடினம். கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரு பதக்கங்கள் மட்டுமே பெற்றோம். இந்தமுறை பல பதக்கங்களை வெல்வோம். டங்கல் படத்துக்குப் பிறகு பெண்களிடையே மல்யுத்தம் விளையாட்டு எளிதில் சென்றடைந்துள்ளது என்று கூறியுள்ளார்.
Advertisement
2012 ஒலிம்பிக்ஸில் பங்கேற்றார் கீதா போகத். மல்யுத்த விளையாட்டில் ஒலிம்பிக்ஸுக்குத் தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்கிற பெருமையைப் பெற்றார். தில்லியில் நடைபெற்ற 2010 காமன்வெல்த் கேம்ஸ் போட்டியில் தங்கம் வென்றார்.