முகப்பு
செய்திகள்

டெஸ்ட்: விராட் கோலி அபார சதம்! பாண்டியா ரன் அவுட்!

விராட் கோலி, 146 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார். இது அவருடைய 21-வது டெஸ்ட் சதமாகும்... 

Updated On : 30 ஜனவரி, 2024 at 11:59 AM
பகிர்:

இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி, தென் ஆப்பிரிக்காவின் செஞ்சுரியன் நகரில் சனிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் இரண்டாம் நாளன்று அந்த அணி 335 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய தரப்பில் அதிகபட்சமாக அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்பிறகு தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி 2-ம் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. கோலி 85, பாண்டியா 11 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். தொடக்க வீரர் விஜய் சிறப்பாக விளையாடினாலும் எதிர்பாராத விதமாக 46 ரன்களில் ஆட்டமிழந்தார். புஜாரா முதல் பந்திலேயே ரன் அவுட் ஆனது ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது. ராகுல் 10, ரோஹித் சர்மா 10, பார்தீவ் படேல் 19 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்கள்.

இன்றைய நாளின் தொடக்கத்தில் இந்திய அணிக்கு 5 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 152 ரன்கள் பின்தங்கியிருந்தது. நேற்று எடுத்த 85 ரன்களுடன் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய கேப்டன் விராட் கோலி, 146 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார். இது அவருடைய 21-வது டெஸ்ட் சதமாகும். 

ஆனால் அடுத்த ஓவரில் பாண்டியா ரன் அவுட் ஆகி இந்திய அணியின் மகிழ்ச்சியைக் குறைத்தார். 

இந்திய அணி 68 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 103, அஸ்வின் 5 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.