உசைன் போல்டாக புஜாரா மாற வேண்டியதில்லை: ரவி சாஸ்திரி கருத்து!
ஆடுகளத்தில் சிறிது நேரம் தாக்குப்பிடித்தால் போதும், தொடர்ந்து விளையாடக்கூடியவர்...
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டி 20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. டி 20 தொடரை இந்தியாவும், ஒரு நாள் போட்டித் தொடரை இங்கிலாந்தும் வென்றன. இந்நிலையில் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி பர்மிங்ஹாமில் தொடங்குகிறது.
இந்நிலையில் இந்திய அணியில் புஜாரா இடம்பிடிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. சமீபகாலமாக அவர் சுமாராக விளையாடி வருவதால், அணியிலிருந்து நீக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. இதையடுத்து ஒரு பேட்டியில் ரவி சாஸ்திரி கூறியதாவது:
நீண்ட நாளாக இந்திய கிரிக்கெட் அணியின் தூணாக உள்ளார் புஜாரா. அவருக்கு பேட்டிங் செய்வது மிகவும் பிடித்தமானதாகும். அதை அவர் செய்யவேண்டும் என விரும்புகிறோம். தென் ஆப்பிரிக்காவில் துரதிர்ஷ்டவசமாக சிலமுறை ரன் அவுட் ஆகிவிட்டார். இதை அவர் செய்யக்கூடாது என எதிர்பார்க்கிறோம். அவர் உசைன் போல்டாக மாறவேண்டியதில்லை. புஜாராவாக மட்டுமே இருக்கவேண்டும் என விரும்புகிறோம். ஆடுகளத்தில் நிலைத்து நின்று ஆடவேண்டும். ரன் அவுட்டின் மூலமாக விக்கெட்டைப் பறிகொடுக்கக் கூடாது.
Advertisement
அவர் ஆடுகளத்தில் சிறிது நேரம் தாக்குப்பிடித்தால் போதும், தொடர்ந்து விளையாடக்கூடியவர். எனவே பேட்டிங் வரிசையில் அவர் முக்கியமானவர். ஒரு இன்னிங்ஸில் பெரிய ஸ்கோர் எடுத்துவிட்டால் அவருடைய பிரச்னைகள் சரியாகிவிடும். 60, 70 ரன்கள் எடுத்துவிட்டால் அவர் வேறு ஒரு வீரராகத் தோற்றமளிப்பார். இந்த எண்ணங்கள் அவரிடம் இருக்கவேண்டும் என விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.