ஷிகர் தவன் இல்லாதது இந்திய அணிக்கு பேரிழப்பு என்று ராஸ் டெய்லர் சீண்டியுள்ளார். இந்தியா, நியூஸிலாந்து இடையிலான உலகக் கோப்பை லீக் ஆட்டம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
இதையடுத்து புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நியூஸிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ராஸ் டெய்லர் பேசியதாவது:
உலகக் கோப்பைத் தொடரில் இன்னும் நிறைய சவால்கள் காத்திருக்கின்றன. எனவே 9 அணிகளுக்கும் வாய்ப்புள்ளது. தற்போதைக்கு முதல் 4 இடங்களைப் பெற 7 அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.
எனவே புள்ளிப்பட்டியலில் முதலிடமோ அல்லது 4-ஆவது இடமோ, முதலில் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறுவதுதான் முக்கியம். அதன் பின்னர் அந்த 2 வெற்றிகளைப் பெற்றுவிட்டால் கோப்பை நிச்சயம்.
இப்போதுள்ள இந்திய அணி ஐசிசி தொடர்களில் மிகவும் சிறப்பாக செயல்படக்கூடியது. அதிலும் குறிப்பாக அந்த அணியின் துவக்க வீரர் ஷிகர் தவன் சிறப்பான ஆட்டத்திறன் பெற்றவர்.
துவக்க ஜோடியாக களமிறங்கும் ரோஹித், தவன் ஜோடி தங்களுக்குள் நல்ல புரிந்துணர்வு கொண்டது. எனவே ஷிகர் தவன் இல்லாதது இந்திய அணிக்கு நிச்சயம் பேரிழப்பு என்று தெரிவித்தார்.