2014-ல் கோலி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஆன பிறகு இரு தொடர்களில் மட்டுமே அவர் தோல்வியடைந்துள்ளார். 2018-ல் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் விளையாடிய டெஸ்ட் தொடர்களில் கோலி தலைமையிலான இந்திய அணி தோற்றது. இந்த வருடம் ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
கோலியின் தலைமைப் பண்பைப் பாராட்டி முன்னாள் வீரர் கம்பீர் பேசியதாவது:
டெஸ்ட் ஆட்டத்தில் தோற்பதற்கு கோலி அஞ்சுவதில்லை. தோற்பதற்கு அஞ்சினால் உங்களால் வெற்றி பெறமுடியாது. அதுதான் கோலியின் தனிப்பட்ட குணம்.
நாம் கங்குலி, தோனி, டிராவிட் பற்றிப் பேசுகிறோம். ஆனால் விராட் கோலி என்ன செய்துள்ளார் என்றால், இந்திய அணி தற்போது வெளிநாடுகளிலும் டெஸ்ட் தொடர்களை வெல்கிறது. இதர கேப்டன்கள் எடுக்காத துணிச்சலான முடிவுகளை அவர் எடுத்துள்ளார். மற்ற கேப்டன்கள் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் இருந்தால் தோற்கமாட்டோம் என எண்ணினார்கள். ஆனால் விராட் கோலி மட்டுமே வெளிநாடுகளில் ஐந்து பந்துவீச்சாளர்களைக் கொண்டு விளையாடினார். ஆல்ரவுண்டரான ஹார்திக் பாண்டியாவை அணியில் சேர்த்துக்கொண்டார். தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற கடைசி டெஸ்டில் இந்திய அணி ஹார்திக் பாண்டியா மற்றும் நான்கு பந்துவீச்சாளர்களைத் தேர்வு செய்ததால் அந்த டெஸ்டில் வென்றது என்று கூறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் ஆட்டத்தை 1 இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரையும் 2-0 என கைப்பற்றியது. சொந்த மண்ணில் தொடர்ந்து 11 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றியதால் புதிய உலக சாதனையை படைத்துள்ளது இந்திய அணி. இதற்கு முன்பு ஆஸ்திரேலிய அணி உள்ளூரில் தொடர்ந்து 10 டெஸ்ட் தொடர்களை இருமுறை வென்றிருந்தது.