கடைசியாக ஒரு சர்வதேச ஆட்டத்தில் விளையாடுவாரா தோனி?
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனியை கௌரவிக்கும் வகையில், அவருக்காக கடைசியாக ஒரு ஆட்டம் நடத்த வேண்டும் என ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனியை கௌரவிக்கும் வகையில், அவருக்காக கடைசியாக ஒரு ஆட்டம் நடத்த வேண்டும் என ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (சனிக்கிழமை) அறிவித்தார். கடந்தாண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டம்தான் தோனி கடைசியாக விளையாடிய சர்வதேச கிரிக்கெட் ஆட்டம்.
இதைத் தொடர்ந்து, தோனிக்காக கடைசியாக ஒரு சர்வதேச ஆட்டத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் விருப்பம் தெரிவித்துள்ளார். தோனியின் பயிற்சியாளரும் ஹேமந்த் சோரனின் விருப்பத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஆனால், தோனிக்கான கடைசி சர்வதேச ஆட்டத்துக்கு வாய்ப்பில்லை என்று ஐபிஎல் முன்னாள் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
இதுபற்றி சுக்லா தெரிவித்ததாவது:
"தன்னுடைய கடைசி ஆட்டத்துக்கான எந்தவொரு விருப்பத்தையும் பிசிசிஐ-யிடம் தோனி வெளிப்படுத்தவில்லை. அவர் இந்தக் கோரிக்கையை எழுப்பாததால், அவருக்கான கடைசி ஆட்டம் குறித்த பேச்சுக்கே இடமில்லை." என்றார் ராஜீவ் சுக்லா.