பில் பிரெளன்கள் இதை நிறுத்த வேண்டும்: மன்கட் சர்ச்சை குறித்து மீண்டும் கருத்துகளைத் தெரிவித்த அஸ்வின்
மன்கட் சர்ச்சை தொடர்பாக மீண்டும் தனது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின்.
மன்கட் சர்ச்சை தொடர்பாக மீண்டும் தனது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின்.
உலகக் கோப்பை சூப்பர் லீக்கை அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைத்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி). ஜூலை 30 முதல் இங்கிலாந்து - அயர்லாந்து அணிகளுக்கிடையே இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடர், சூப்பர் லீக்கின் முதல் தொடராக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2023-ல் இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைப் போட்டிக்கான தகுதிச் சுற்றாக இது கருதப்படும்.
உலகக் கோப்பை சூப்பர் லீக்கில் இடம்பெறவுள்ள ஒருநாள் ஆட்டங்களில் மட்டுமல்லாமல் சர்வதேச டி20 ஆட்டங்களிலும் நோ பால் தொடர்பான முடிவுகளை 3-வது நடுவர் எடுப்பார் என ஐசிசி அறிவித்துள்ளது.
நோல் பால் தொடர்பாக ஏராளமான சர்ச்சைகள் உருவாவதால் இனிமேல் நோ பால் தொடர்பான முடிவுகளை 3-வது நடுவர் எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது ஐசிசி. இதன்படி பந்துவீசிய சில நொடிகளில் தொலைக்காட்சி முன்பு அமர்ந்துள்ள 3-வது நடுவருக்கு அக்காட்சி அளிக்கப்படும். அதன் அடிப்படையில் நோ பாலா இல்லையா என்பதை 3-ம் நடுவர் முடிவெடுப்பார்.
கடந்த வருட ஐபிஎல் போட்டியிலும் உலகக் கோப்பைப் போட்டியிலும் நோ பால் தொடர்புடைய சர்ச்சைகள் ஏற்பட்டன. இதனால் ஐபிஎல் போட்டியிலும் நோ பால் தவறுகளைக் கண்டுபிடிக்கத் தனி நடுவர் நியமிக்கப்படவுள்ளார்.
கடந்த வருட ஐபிஎல் போட்டியின் ஒரு பகுதியாக ராஜஸ்தான் பேட்ஸ்மேன் ஜோஸ்பட்லரை மன்கட் முறைப்படி பஞ்சாப் கேப்டன் அஸ்வின் அவுட் செய்தது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஒரு பவுலர் பந்துவீசுவதற்கு முன்பு ரன்னர் கிரீஸை விட்டு வெளியே சென்றால் ரன் அவுட் செய்யலாம் என்ற விதி கிரிக்கெட்டில் உள்ளது. அதை மன்கட் முறை என அழைக்கின்றனர். இந்த முறையில் அவுட் செய்வது மிகவும் அரிதாகவே நடக்கிறது. ஏற்கெனவே மன்கட் முறையில் அவுட் செய்வது தொடர்பாக விவாதம் எழுந்துள்ளது. பொதுவாக கிரீஸை விட்டு நகர்ந்தால், பேட்ஸ்மேன்களுக்கு, எச்சரிக்கை தருவது பவுலர்களின் வழக்கம். அது கண்டிப்பானதில்லை. இந்நிலையில் அஸ்வினும் மன்கட் முறையில் பட்லரை அவுட் செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது.
கடந்த 1947-ல் ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் ஆஸி வீரர் பிரெளனை இம்முறையில் ரன் அவுட் செய்தார் இந்தியாவின் வினோத் மன்கட். இதுகுறித்து அப்போதே பெரிய விவாதம் எழுந்தது. எனினும் கிரிக்கெட்டின் விதிமுறைகளில் இந்த அவுட் உள்ளது. இதனால் மன்கட் முறை அவுட் என பெயரிடப்பட்டு அழைக்கப்படுகிறது.
பட்லரை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தது எனது உள்ளுணர்வு மற்றும் விதிகளின்படி தான் என அஸ்வின் கூறினார். நான் செய்தது ஆட்டத்தின் தன்மைக்கு எதிரானது என்றால் கிரிக்கெட் விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதில் ஆட்டத்தின் தன்மை எங்கே பாதிக்கப்படுகிறது. இது முன்கூட்டியே திட்டமிட்டது இல்லை. ஐசிசி விதி 41.16-இன்படி மன்கட் முறையில் அவுட் செய்யலாம். ஒருவருக்கு பொருந்தும் விதி ஏன் மற்றொருவருக்கு பொருந்தாது என்றார்.
இந்நிலையில் மன்கட் சர்ச்சை குறித்து மீண்டும் தனது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார் அஸ்வின். நோ பால் தொடர்பான முடிவுகளை 3-வது நடுவர் எடுப்பார் என ஐசிசி அறிவித்துள்ளதை வைத்து அவர் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பந்துவீச்சாளர்களுக்குக் கடினமான சூழல் உள்ள இந்நிலைமையைச் சமன் செய்தாக வேண்டும். கிரீஸ் இருவருக்குமானது (பேட்ஸ்மென், பந்துவீச்சாளர்). பந்துவீச்சாளர் பந்துவீசும் முன்பு நடுவர் அருகே உள்ள பேட்ஸ்மேன் கிரீஸை விட்டு வெளியேறியுள்ளாரா என்பதையும் தொழில்நுட்பம் கவனிக்க வேண்டும். எல்லையை மீறியிருந்தால் அந்த ரன்னைக் கணக்கில் சேர்க்கக் கூடாது. இதன்மூலம் சமநிலை கடைப்பிடிக்கப்படும். தொழில்நுட்பம் பெரும்பாலும் பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்படுகிறது.
மறுமுனையில் உள்ளவர் பந்துவீசும்போது கிரீஸுக்கு வெளியே நின்று சுலபமாக 2 ரன்கள் எடுத்து விடுவார். இதனால் அதே பேட்ஸ்மேன் மீண்டும் பந்துவீச்சை எதிர்கொள்வார். அடுத்த பந்தில் அந்த பேட்ஸ்மேன் பவுண்டரியோ சிக்ஸரோ எடுக்கலாம். ஒரு ரன்னுக்குப் பதிலாக இங்கே நான் 7 ரன்கள் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.
பில் பிரெளன்கள் தாங்களாக ஓடி ஆட்டமிழப்பதை நிறுத்த வேண்டும். மன்கட் ரன் அவுட் செய்த பேட்ஸ்மேனின் பெயர் பில் பிரெளன். பில் பிரெளன்கள் இதை நிறுத்த வேண்டும் என்றார்.