சிஎஸ்கே அணிக்கு எதிராக வித்தியாசமாக முயற்சி செய்வேன்: தில்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த்
தில்லி அணி இதுவரை பட்டம் எதுவும் வெல்லவில்லை. எனவே முதல்முறையாக பட்டம் வெல்ல முயற்சி செய்வேன்...
தில்லி அணி முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல முயற்சி செய்வேன் என தில்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் கூறியுள்ளார்.
இந்த வருட ஐபிஎல் போட்டி வரும் 9-ம் தேதி முதல் மே 30-ம் தேதி வரை சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் நடைபெறவுள்ளது. கரோனா தொற்று அச்சம் காரணமாக, தொடக்க நிலை ஆட்டங்களில் ரசிகா்களுக்கு அனுமதி கிடையாது.
ஏப்ரல் 9 அன்று சென்னையில் நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் மும்பையும் பெங்களூரும் மோதுகின்றன. அடுத்த நாள், மும்பையில் சென்னை - தில்லி அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் தில்லி கேபிடல்ஸ் அணியின் புதிய கேப்டன் ரிஷப் பந்த் கூறியதாவது:
ஒரு கேப்டனாக என்னுடைய முதல் ஆட்டம், தோனிக்கு எதிராக அமைந்துள்ளது. அவரிடம் நான் நிறைய கற்றுக்கொண்டிருப்பதால் இந்த ஆட்டம் நல்ல அனுபவமாக இருக்கும். ஒரு வீரராக சொந்த அனுபவங்களும் என்னிடம் உள்ளன. எனவே, என்னுடைய அனுபவங்களையும் தோனியிடம் கற்றுகொண்டதையும் வைத்து சிஎஸ்கே அணிக்கு எதிராக வித்தியாசமாக ஏதாவது முயற்சி செய்வேன்.
தில்லி அணி இதுவரை பட்டம் எதுவும் வெல்லவில்லை. எனவே முதல்முறையாக பட்டம் வெல்ல முயற்சி செய்வேன். கடந்த மூன்று வருடங்களாக நாங்கள் நன்றாக விளையாடி வருகிறோம். பயிற்சியாளர் பாண்டிங் அணிக்கு மிகப் பெரிய உற்சாகத்தை அளிக்கிறார். அவரும் அணி வீரர்களும் தில்லி அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல உதவுவார்கள் என நம்பிக்கையுடன் உள்ளேன் என்றார்.