ஆசியக் கோப்பையில் பங்கேற்கவுள்ள இந்திய யு-19 வீரர்களுக்குப் பிரபல வீரர் ரோஹித் சர்மா ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடருக்கு கேப்டனாகவும் டெஸ்ட் தொடருக்கு துணை கேப்டனாகவும் ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் காயம் காரணமாக ரோஹித் சர்மாவும் ஜடேஜாவும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை. இருவரும் பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதெமியில் தங்களுடைய காயங்களுக்குச் சிகிச்சை எடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஆசியக் கோப்பையில் பங்கேற்கவுள்ள இந்திய யு-19 வீரர்களுக்குப் பிரபல வீரர் ரோஹித் சர்மா ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இதுகுறித்த தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. பெங்களூர் என்சிஏ-வில் ரோஹித் சர்மா அளித்த ஆலோசனைகள் யு-19 வீரர்களுக்குப் பெரிய ஊக்கமாக இருந்திருக்கும். அவருக்கு நன்றி என என்சிஏ-வின் தலைவர் விவிஎஸ் லக்ஷ்மண் கூறியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.