பந்த் ஆட்டத்தை மாற்றிக்கொள்ளத் தேவையில்லை, ஆனால்..: புஜாரா அறிவுரை
ரிஷப் பந்த் ஆட்டத்தை மாற்றிக்கொள்ளத் தேவையில்லை, ஆனால், ஷாட்களைத் தேர்வு செய்து விளையாட வேண்டும் என இந்திய அணியின் மூத்த பேட்ஸ்மேன் சேத்தேஷ்வர் புஜாரா தெரிவித்துள்ளார்.
ரிஷப் பந்த் ஆட்டத்தை மாற்றிக்கொள்ளத் தேவையில்லை, ஆனால், ஷாட்களைத் தேர்வு செய்து விளையாட வேண்டும் என இந்திய அணியின் மூத்த பேட்ஸ்மேன் சேத்தேஷ்வர் புஜாரா தெரிவித்துள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் 3-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் இன்னும் 321 ரன்கள் பின்தங்கியுள்ளது. விக்கெட்டுகள் சரிந்தபோது புஜாரா நிதானமாக விளையாடி 73 ரன்களும், பந்த் அதிரடியாக விளையாடி 91 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.
ஆட்டம் முடிந்தவுடன் பந்த் ஆட்டம் குறித்து புஜாரா கூறியது:
Advertisement
"அதிரடி ஆட்டம் ரிஷப் பந்தின் இயல்பான ஆட்டம். அதனால், அவரை நிறைய கட்டுப்படுத்த முடியாது. அவரால், பெரிதளவில் தடுப்பாட்டத்தை வெளிப்படுத்த முடியாது. ஏனென்றால், அவர் விரைவில் ஆட்டமிழந்து விடுவார்.
இதுபோன்ற ஷாட்களை விளையாடுவது அவரது ஆட்டத்துக்கு நல்லது. ஆனால், சில தருணங்களில் ஷாட்களை சரியாக தேர்வு செய்ய வேண்டும். எந்த ஷாட்களை விளையாட வேண்டும், எந்த ஷாட்களை விளையாடக் கூடாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். எந்த நேரத்தில் அவர் களத்தில் இருப்பது முக்கியம் என்பது போன்ற சூழ்நிலைகளை அவர் புரிந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற விஷயங்களை சமநிலைப்படுத்துவது அவருக்கு மிகவும் முக்கியம்.
அவர் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வார். களத்தில் யார் இருந்தாலும் பந்த் அவர்களுடன் கொஞ்சம் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி மற்றொரு பாட்னர்ஷிப்பை அமைத்து விளையாடுவதற்கான தருணங்களும் உள்ளன. அவர் அணிக்கு முக்கியத்துவம் அளிக்கும் திறனுடையவர். ஏனென்றால், அவர் எப்போது நீண்ட நேரம் பேட் செய்தாலும் பெரிய ரன்களை அடித்துவிட்டே ஆட்டமிழக்கிறார். எனவே, அவர் அதை நிச்சயம் உணருவார்."