பாகிஸ்தானுக்கு எதிரான 3-ம் ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 3-0 எனக் கைப்பற்றியுள்ளது.
எக்பாஸ்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர் இமாம் உல் ஹக் 56 ரன்களும் கேப்டன் பாபர் அஸாம் 158 ரன்களும் முகமது ரிஸ்வான் 74 ரன்களும் எடுத்ததால் பாகிஸ்தான் அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 331 ரன்கள் குவித்தது. பிரைடன் கார்ஸ் 5 விக்கெட்டுகளும் சகிப் முகமது 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.
கடினமான இலக்கை எதிர்கொண்ட இங்கிலாந்து அணி, 165 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. ஜேம்ஸ் வின்ஸ் 102 ரன்களும் பின்வரிசை வீரர் லூயிஸ் கிரேகோரி 77 ரன்களும் எடுத்து அணியைச் சரிவிலிருந்து மீட்டார்கள். பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி, 48 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 332 ரன்கள் எடுத்து அபாரமான வெற்றியை அடைந்தது. ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது. பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ராஃப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.