ஆசிய குத்துச்சண்டை: தங்கம் வென்ற இந்திய வீரர் சஞ்சீத்
துபையில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சஞ்சீத் தங்கம் வென்றுள்ளார்.
துபையில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சஞ்சீத் தங்கம் வென்றுள்ளார்.
ஆசிய குத்துச்சண்டை போட்டி தில்லியில் மே 21 முதல் 31 வரை நடைபெறுவதாக இருந்தது. எனினும் இந்தியாவில் கரோனா பரவல் அதிகமாக உள்ளதால் ஆசிய குத்துச்சண்டை போட்டி தில்லியில் நடைபெறுவதற்குப் பதிலாக துபையில் நடைபெற்றது.
ஆடவர் 91 கிலோ பிரிவின் இறுதிச்சுற்றில் இந்தியாவின் சஞ்சீத், 2016 ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற கஸகஸ்தானின் வாஸ்ஸில்லி லெவிட்டை 4-1 என்கிற புள்ளிக் கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றுள்ளார்.
இதற்கு முன்பு டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள இந்தியாவின் பூஜா ராணி, மகளிர் 75 கிலோ பிரிவில் தங்கம் வென்றார்.
இதையடுத்து ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்திய அணி இரு தங்கங்கள் உள்பட 15 பதக்கங்களை வென்றுள்ளது. இதற்கு முன்பு 2019-ல் பாங்காங்கில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்திய அணி 13 பதக்கங்களை வென்றது. இந்தமுறை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகப் பதக்கங்களை இந்திய அணி வென்றுள்ளது.