முதல் சர்வதேச சதம் அடிப்பதற்கு யுவ்ராஜ் சிங் சொன்ன அறிவுரை மிகவும் உதவியாக இருந்ததாக பிரபல பேட்டர் ஷுப்மன் கில் கூறியுள்ளார்.
ஜிம்பாப்வேக்கு எதிரான 3-வது ஆட்டத்தில் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியிருக்கிறது இந்தியா.
ஹராரேவில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் இந்தியா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஜிம்பாப்வே 49.3 ஓவர்களில் 276 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியாவின் ஷுப்மன் கில் ஆட்டநாயகன், தொடர்நாயகன் ஆனார். சிறப்பாக விளையாடிய 22 வயது ஷுப்மன் கில், 130 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 97 பந்துகளில் 1 சிக்ஸர், 15 பவுண்டரிகள் அடித்தார். இது அவருடைய முதல் ஒருநாள் சதம்.
ஜிம்பாப்வே நாட்டில் அதிக ஒருநாள் ரன்களை எடுத்த இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் ஷுப்மன் கில். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், 1998-ல் 127* ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அச்சாதனையை ஷுப்மன் கில் தாண்டியுள்ளார்.
தனது முதல் சதம் பற்றி ஷுப்மன் கில் கூறியதாவது:
பேட்டிங் செய்வதற்குச் சாதகமான ஆடுகளமாக இருந்தது. எனக்கு அதிர்ஷ்டமும் இருந்தது. கிடைத்த வாய்ப்புகளை நன்குப் பயன்படுத்திக் கொண்டேன். ஜிம்பாப்வேவுக்கு வருவதற்கு முன்பு யுவ்ராஜ் சிங்கைச் சந்தித்தேன். நான் நன்கு விளையாடி வருவதாக அவர் சொன்னார். ஆடுகளத்தில் நிலைத்து நின்ற பிறகு நீண்ட நேரம் விளையாட முயலவேண்டும் என அறிவுறுத்தினார். சதமடிக்க வேண்டும் என என்னை ஊக்கப்படுத்தினார் என்று கூறியுள்ளார்.
மகளிர் செஸ் கிராண்ட்மாஸ்டருக்கு அரசு வேலை: கோவா முதல்வர் அறிவிப்பு
பிரக்ஞானந்தாவின் தோல்விக்குக் கண்ணீர் விட்ட பிரபல செஸ் வீரர்: பயிற்சியாளர் உருக்கம்!
கிரிக்கெட்டும் செஸ்ஸும் ஒன்றல்ல: உலக சாம்பியன் கார்ல்சனின் ஆச்சர்ய பதில்
ராகுல் டிராவிடுக்கு கரோனா: இந்திய அணியின் நிலை பற்றி பிசிசிஐ அறிவிப்பு