2-வது இன்னிங்ஸில் அரை சதம்: ரிஷப் பந்தின் புதிய சாதனை
இந்தியாவுக்கு வெளியே நடைபெற்ற டெஸ்டில் சதமும் அரை சதமும் எடுத்த ஒரே இந்திய விக்கெட் கீப்பர்...
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்டில் 2-வது இன்னிங்ஸில் அரை சதமடித்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார் ரிஷப் பந்த்.
பிர்மிங்கமில் நடைபெற்று வரும் 5-வது டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 84.5 ஓவர்களில் 416 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி, 61.3 ஓவர்களில் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சதமடித்த பேர்ஸ்டோ, 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிராஜ் 4, பும்ரா 3, ஷமி 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். 3-ம் நாள் முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 45 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. பும்ரா 50, ரிஷப் பந்த் 30 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
இன்று புஜாரா 66 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பிறகு 76 பந்துகளில் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார் ரிஷப் பந்த். முதல் இன்னிங்ஸில் 146 ரன்கள் எடுத்தவர் 2-வது இன்னிங்ஸில் அரை சதமெடுத்துள்ளார்.
ஒரே டெஸ்டில் சதமும் அரை சதமும் எடுத்த 2-வது இந்திய விக்கெட் கீப்பர், ரிஷப் பந்த். இதற்கு முன்பு 1973-ல் மும்பையில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய விக்கெட் கீப்பரான ஃபரூக் இன்ஜினியர் சதமும் அரை சதமும் எடுத்தார்.
மேலும் இந்தியாவுக்கு வெளியே நடைபெற்ற டெஸ்டில் சதமும் அரை சதமும் எடுத்த ஒரே இந்திய விக்கெட் கீப்பர் என்கிற புதிய சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார்.
இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 61 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ரிஷப் பந்த் 57, ஜடேஜா 4 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இந்திய அணி 330 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.