முகப்பு
செய்திகள்

 செஸ் ஒலிம்பியாட்: சென்னையில் இன்று கோலாகலம்

உலகின் மிகப்பெரிய செஸ் திருவிழாவான 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்குகிறது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:48 PM
ஒலிம்பியாட் போட்டியையொட்டி பல மாநிலங்களைக் கடந்து சென்னைக்கு வந்த ஜோதியை ஏந்தியவாறு போட்டி நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கம் நோக்கி எடுத்துச் சென்ற முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்.
பகிர்:

உலகின் மிகப்பெரிய செஸ் திருவிழாவான 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்குகின்றன.
 பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடக்க விழாவில் கலந்து கொள்கின்றனர்.
 ஃபிடே, ஏஐசிஎஃப், தமிழக அரசு சார்பில் சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள போர்பாயிண்ட்ஸ் ஓட்டலில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகின்றன.
 இதற்காக 2 பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு ஒரே நேரத்தில் 1400 பேர் ஆடக்கூடிய வகையில் 702 டிஜிட்டல் செஸ் போர்டுகள் நிறுவப்பட்டுள்ளன.
 செஸ் ஒலிம்பியாட் வரலாற்றிலேயே இப்போட்டிக்கு தான் 187 நாடுகளில் இருந்து 2,500-க்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். அனைவருக்கும் 3,000-க்கு மேற்பட்ட தங்கும் அறைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 இறுதி ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், புதன்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டி நடைபெறவுள்ள இடத்தில் நேரில் ஆய்வு செய்தார்.


 150 மாணவ, மாணவியர் விமானப் பயணம்: அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் 150 பேர் சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு விமானம் மூலம் சிறப்பு பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களை அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தங்கம் தென்னரசு, சிவ.வீ. மெய்யநாதன், தா.மோ.அன்பரசன், சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.
 ஃபிடே தலைவர் ஆய்வு: போட்டியில் பங்கேற்கும் வெளிநாட்டு அணிகள் சென்னைக்கு வந்து சேர்ந்துள்ள நிலையில், சர்வதேச செஸ் சம்மேளனம் (ஃபிடே) தலைவர் அர்காடி டிவோர்கோவிச், ஏஐசிஎஃப் நிர்வாகிகள் சஞ்சய் கபூர், பரத் செளஹான் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
 வெள்ளிக்கிழமை முதல் சுற்று ஆட்டங்கள் தொடங்குகின்றன. ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை மொத்தம் 11 சுற்று ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
 பதக்கமே இலக்கு: ஹரிகா

மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாடில் கண்டிப்பாக பதக்கம் வெல்வேன் என நிறைமாத கர்ப்பிணியும், இந்திய ஏ அணி வீராங்கனையுமான துரோணவல்லி ஹரிகா கூறியுள்ளார்.
 கர்ப்பிணியாக இருந்தாலும், போட்டியில் பங்கேற்று ஆடுவதற்கான மன உறுதியுடன் உள்ளேன். ஏ அணி உறுப்பினர்கள் சிறப்பான பார்மில் உள்ளனர். ஜார்ஜியா, உக்ரைன், போலந்து, அமெரிக்கா, கஜகஸ்தான் உள்ளிட்டவை நமக்கு சவாலாக இருக்கும். ஒலிம்பியாட் போட்டி நடப்பதால் செஸ் குறித்து இந்தியாவில் அதிக விழிப்புணர்வு ஏற்பட்டு, சிறுவர், சிறுவர் மேலும் அதிகமாக பின்பற்றுவர் என்றார்.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments