சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழா தொடக்கம்!
சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது குறித்து...
பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.05) தொடங்கியது.
சக்தி தலங்களில் முதன்மையாக விளங்கும் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் வேறு எந்த தலத்திலும் காணப் பெறாதபடி இத்திருத்தலத்தில் அஷ்டபுஜங்களுடன் கூடிய சுயம்பு திருமேனியாக பதம் மாறி, சிவ பதத்தில் விக்ரம சிம்மாசனத்தில் எழுந்தருளி மும்மூர்த்திகளை நோக்கி மாயா சூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எந்த விதமான நோய்களும், தீவினைகளும் அணுகாது, சகல சௌபாக்கியங்களும் கிடைக்க, அம்மனே பக்தர்களுக்காக வருடம் தோறும் மாசி கடைசி ஞாயிறு முதல் 28 நாள்கள் பச்சைப்பட்டினி விரதம் இருப்பது இத்திருக்கோயிலின் தனிப்பெரும் சிறப்பாகும்.
இத்தகைய சிறப்பு மிக்க பச்சைப் பட்டினி விரதம் பூரணமடைந்தவுடன், சிவபெருமானிடம் உள்ள சர்வ சக்தியையும் பெற்று, படைத்தல் ( கொடியேற்றுதல் - முதல் திருநாள்), காத்தல் (ரிஷப வாகன காட்சி - ஐந்தாம் நாள்), அழித்தல் ( திருத்தேர் - பத்தாம் திருநாள், மறைத்தல் (புஷ்பப்பல்லக்கு உற்சவம் - பன்னிரெண்டாம் திருநாள் ), அருள்பாலித்தல் (தெப்பம் - பதின்மூன்றாம் திருநாள்) இந்த ஐந்தொழில்களையும் புரிந்து சித்திரை பெருவிழா நாள்களில், அம்மன் அருள் பாலித்து வருவது இத்திருத்தலத்தின் சிறப்பாகும்.
Advertisement
சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.
சிறப்பு மலர் அலங்காரத்தில் உற்சவ மாரியம்மன் தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினார். இதனையடுத்து கொடிமரத்திற்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், உள்ளிட்ட திரவியப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகளுக்கு பிறகு காலை 8 மணி அளவில் பக்தர்களின் பக்தி கோஷம் முழங்க கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து மஹா தீபாரதனை நடைபெற்றது..
விழாவில் தொடர்ந்து ஏப்.6ம் தேதி மரசிம்ம வாகனம், ஏப்7ம் தேதி மரபூத வாகனம், ஏப்.8 ம் தேதி மர அன்னபக்ஷி வாகனம், ஏப்.9ம் தேதி மர ரிஷப வாகனம், ஏப்.10ம் தேதி மர யானை வாகனம், ஏப்.11 ம் தேதி மரசேஷ வாகனம், ஏப். 12ம் தேதி மரக்குதிரை வாகனம், ஏப்.13 ம் தேதி வெள்ளிக் குதிரை வாகனமும், விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஏப்.14ம் தேதி காலை 10.31 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் மிதுன லக்னத்தில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்வும், நடைபெற உள்ளது. மேலும் ஏப்.15 ம் தேதி வெள்ளிக்காமதேனுவாகனம், ஏப்.16ம் தேதி புஷ்ப பல்லக்கு, ஏப்.17ம் தேதி தெப்பத் திருவிழாவும், தேர் முடிந்த எட்டாம் திருநாள் ஏப். 21ம் தேதி தங்க கமலவாகனத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
சித்திரை பெருந்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் இணை ஆணையர் எம்.சூரியநாரயணன், மணியக்காரர் பழனி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.