கவலையை மறக்க...
'இயந்திரத்தனமான வாழ்க்கையில் அதிகரித்து வரும் மன அழுத்தம் தவிர்க்க முடியாதது.
'இயந்திரத்தனமான வாழ்க்கையில் அதிகரித்து வரும் மன அழுத்தம் தவிர்க்க முடியாதது. அதற்காகும் மருத்துவச் சிகிச்சைக்கான செலவைவிட, குறைந்த செலவில், அதிகம் மெனக்கெடல் இல்லாமல், மனநலச் சேவையை என்னிடம் பெறுவதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்' என்கிறார் மும்பையைச் சேர்ந்த பிருத்விராஜ் போரா.
இவர் மும்பை அந்தேரி கடற்கரையில், 'உங்க குறையை, துக்கத்தைக் கேட்க ஆள் இல்லையா? வாங்க ... நான் காது கொடுத்துக் கேட்கிறேன், ஆறுதல் வார்த்தைகள் சொல்றேன், எனக்குத் தெரிந்த தீர்வுகளையும் சொல்றேன். சாதாரண பிரச்னை முதல் சிக்கலான பிரச்னைவரை அனைத்துக்கும் தீர்வு சொல்கிறேன்.' என்ற வாசகத்துடன் அதற்கான கட்டணத்தையும் போர்டில் எழுதிவைத்துள்ளார்.
பிருத்விராஜ் போரா சொல்கிறார்:
Advertisement
'மும்பை போன்ற நகரத்தில் வீட்டிலோ வெளியிலோ நமது மனக்குறைகளை பிறரிடம் பகிர்ந்து கொள்ள நேரம் கிடைப்பதில்லை. அதுபோல் பிறரது மனக் குறைகளைக் கேட்டு ஆறுதல் தேறுதல் சொல்ல நமக்கு நேரம் இருப்பதில்லை. சனி, ஞாயிறு மும்பை நகரின் பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடத்துக்கு மாலை வேளைகளில் செல்வேன். சிறுவர் முதல் முதியவர்கள் வரை என்னிடம் பேசுகிறார்கள். தனிமையில் உழலும் முதியவர்கள் அலைபேசியில் அழைத்துப் பேசுகிறார்கள். பேசி முடித்ததும் ஒரு சுமை இறங்கியது போல உணர்வதாகச் சொல்கிறார்கள்.
நான் உளவியல், தத்துவம் பாடங்களில் பட்டதாரி. தொலைக்காட்சி தொடர்களில், ஹிந்தி சினிமாக்களில் சிறிய பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறேன்.
சிறிய சாதாரண பிரச்னைகளை நான் கேட்க கட்டணம் 250 ரூபாய். தீவிரமான கவலைகளை என்னுடன் பகிர்ந்து கொள்ள கட்டணம் ரூ.500.
ஒருவர் பிரச்னைகளை என்னிடம் சொல்லி அழ... அவருடன் நானும் சேர்ந்த அழ... ஆயிரம் ரூபாய் கட்டணம். பலர் தனிமையாக உணரும் நேரத்தில், செவிசாய்த்துக் கேட்பதற்காக நான் தயாராக உள்ளதைப் பலரும் பாராட்டுகின்றனர்' என்கிறார் பிருத்விராஜ் போரா.