முகப்பு
செய்திகள்

பிகார் கிரிக்கெட் வீரருக்கு சச்சின் பாராட்டு: காரணம் என்ன?

ரஞ்சி கோப்பைப் போட்டியில் உலக சாதனை படைத்த பிகார் வீரருக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:45 PM
பகிர்:

ரஞ்சி கோப்பைப் போட்டியில் உலக சாதனை படைத்த பிகார் வீரருக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். 

பிளேட் குரூப்பில் பிகார் -  மிசோரம் இடையிலான ரஞ்சி ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பிகார் அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

நடுவரிசை வீரராகக் களமிறங்கிய 22 வயது சகிபுல் கனி புதிய உலக சாதனை படைத்துள்ளார். இது அவருடைய அறிமுக முதல்தர ஆட்டம். இந்நிலையில் அறிமுக முதல்தர ஆட்டத்திலேயே முச்சதம் அடித்து உலக சாதனை நிகழ்த்தி இந்திய கிரிக்கெட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார். இதற்கு முன்பு, 2018-ல் மத்தியப் பிரதேசத்தின் அஜய் ரொஹேரா 267* ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. சகிபுல் கனி, 387 பந்துகளில் 50 பவுண்டரிகளுடன் முச்சதம் அடித்தார். 

405 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 56 பவுண்டரிகள் உள்பட 341 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் சகிபுல் கனி. இதே ஆட்டத்தில் மற்றொரு பிகார் பேட்டர், பபுல் குமார் இரட்டைச் சதம் அடித்தார். சகிபுல் கனியும் பபுல் குமாரும் 4-வது விக்கெட்டுக்கு 500 ரன்களுக்கும் கூடுதலாகக் கூட்டணி அமைத்தார்கள். பிகார் அணி 159.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 686 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 

இந்நிலையில் சகிபுல் கனியைப் பாராட்டியுள்ளர் சச்சின் டெண்டுல்கர். ட்விட்டரில் அவர் தெரிவித்ததாவது: ரஞ்சி கோப்பைப் போட்டியில் அறிமுக ஆட்டத்திலேயே சிறப்பாக விளையாடியதற்குப் பாராட்டுகள் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.