ஐபிஎல் ஒளிபரப்பு உரிம ஏலம்: ரூ.48,390 கோடி ஈட்டுகிறது பிசிசிஐ
ஐபிஎல் போட்டியை 2023 முதல் 2027 வரையிலான 5 ஆண்டுகளுக்கு தொலைக்காட்சி மற்றும் எண்ம (டிஜிட்டல்) ஊடகங்களில் ஒளிபரப்பு செய்வதற்கான உரிமத்தை ஏலத்தில் விட்டதன் மூலம் பிசிசிஐ
ஐபிஎல் போட்டியை 2023 முதல் 2027 வரையிலான 5 ஆண்டுகளுக்கு தொலைக்காட்சி மற்றும் எண்ம (டிஜிட்டல்) ஊடகங்களில் ஒளிபரப்பு செய்வதற்கான உரிமத்தை ஏலத்தில் விட்டதன் மூலம் பிசிசிஐ மொத்தமாக ரூ.48,390 கோடி வருவாய் ஈட்டவுள்ளது.
ஏலத்தில் தொலைக்காட்சி உரிமம் ‘பேக்கேஜ் - ஏ’ எனவும், எண்ம உரிமம் ‘பேக்கேஜ் - பி’ எனவும், குறிப்பிட்ட சில ஆட்டங்களின் எண்ம ஒளிபரப்பு உரிமம் ‘பேக்கேஜ் - சி’ எனவும், வெளிநாட்டு ஒளிபரப்பு உரிமம் (தொலைக்காட்சி மற்றும் எண்மம்) ‘பேக்கேஜ் - டி’ எனவும் வகைப்படுத்தப்பட்டன.
3 நாள்கள் நடைபெற்ற ஏலத்தில், 2-ஆம் நாளான திங்கள்கிழமை இந்திய துணைக் கண்டத்துக்கான தொலைக்காட்சி உரிமத்தை டிஸ்னி ஸ்டாா் ரூ.23,575 கோடிக்கும், இந்திய துணைக் கண்டத்துக்கான எண்ம உரிமத்தை வையாகாம் 18 நிறுவனம் ரூ.20,500 கோடிக்கும் வாங்கின.
Advertisement
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை ஏலத்தில் ‘பேக்கேஜ் - சி’ ஒளிபரப்பு உரிமத்தை வையாகாம் 18 நிறுவனம் ரூ.3,257 கோடிக்கு வாங்கியது. வெளிநாட்டு ஒளிபரப்பு உரிமமான ‘பேக்கேஜ் டி’-ஐ, வையாகாம் 18 மற்றும் டைம்ஸ் இன்டா்னெட் நிறுவனங்கள் ரூ.1,058 கோடிக்கு வாங்கின. இதில் தொலைக்காட்சி மற்றும் எண்ம ஒளிபரப்பு உரிமம் அடக்கம்.
இதில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து பிராந்திய உரிமையை வையாகாம் 18 நிறுவனமும், மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்க நாடுகள், அமெரிக்கா பிராந்திய உரிமையை டைம்ஸ் இன்டா்னெட் நிறுவனமும் கையகப்படுத்தியுள்ளன.
இந்த ஏல மதிப்பால், உலகிலேயே மதிப்பு மிக்க 2-ஆவது போட்டியாக (ஒரு ஆட்ட மதிப்பு அடிப்படையில்) ஐபிஎல் உருவெடுத்துள்ளது.