இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி உள்ளதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
10 ஆண்டுகளாக தொடரும் ஐசிசி கோப்பைக்கான கனவை நனவாக்கும் உறுதியுடனும், தன்னம்பிக்கையுடனும் இந்திய அணி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க: ஆசிய கிரிக்கெட் அணியில் எனது பெயர் இடம்பெறாதது அதிர்ச்சியளித்தது: மூத்த இந்திய வீரர்
இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் அவர் பேசியதாவது: உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நான் 50 ஓவர் உலகக் கோப்பையை வென்றதே கிடையாது. உலகக் கோப்பையை வெல்வது என்பது மிகப் பெரிய கனவு. உலகக் கோப்பையை வெல்வதைக் காட்டிலும் வேறு விஷயங்கள் எதுவும் எனக்கு அதைவிட மகிழ்ச்சியை தரப் போவதில்லை. உலகக் கோப்பையை நீங்கள் எளிதில் வென்றுவிட முடியாது. அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். நாங்கள் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் அதற்காக கடுமையாக உழைத்து வருகிறோம். அணியில் உள்ள அனைவரும் உலகக் கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர். ஏனென்றால், எங்களிடம் சிறந்த அணி இருக்கிறது. நாங்கள் அனைவரும் சிறந்த வீரர்கள். எங்களிடம் உள்ள நம்பிக்கை மற்றும் உறுதி எங்களால் உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்ற ஊக்கத்தை கொடுக்கிறது.
உலகக் கோப்பையை வெல்லவில்லை என்றால் அதனை நாங்கள் சாதரணமாக எடுத்துக் கொள்ள மாட்டோம். கடந்த ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணி தோல்வியடைந்தபோது, நாங்கள் உலகக் கோப்பைக்காக தொடர்ந்து போராடுவோம் என்று கூறினேன். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வந்தது. நாங்கள் தொடர்ந்து உலகக் கோப்பைக்காக போராடி வருகிறோம். ஒரு கட்டத்தில் நாங்கள் கண்டிப்பாக உலகக் கோப்பையை வெல்வோம். நான் ஒரு பேட்ஸ்மேனாக முதலில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். கேப்டன்ஸி என்பது இரண்டாவது பட்சமே. கேப்டன் பொறுப்பு என்பது மிக முக்கியமானது என்பதை நான் மறுக்க முடியாது. அதே நேரத்தில் தொடக்க ஆட்டக்காரராக அணிக்குத் தேவையான ரன்களை நான் சேர்க்க வேண்டும்.
இதையும் படிக்க: 2023: இந்திய கிரிக்கெட்டும்... ஊக்கமருந்து பரிசோதனையும்...
வீரர்களுக்கு காயம் ஏற்படுவது எங்களுக்கு அச்சத்தை கொடுக்கிறது. அதனால் வீரர்களுக்கு ஓய்வளிப்பது முக்கியம். இந்த காரணத்தினால் கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக சில வீரர்கள் ஒரு நாள் போட்டியில் விளையாடவில்லை. அதேபோல இந்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பைக்கு முன்னதாக நான் உள்பட சில வீரர்களுக்கு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளது என்றார்.
மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி கடைசியாக கடந்த 2013 ஆம் ஆண்டில் ஐசிசி நடத்தும் போட்டிகளில் இந்திய அணிக்காக கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.