உலகக் கோப்பையை வெல்வது எனது முடிக்கப்படாத வேலை: ரோஹித் சர்மா
உலகக் கோப்பையை வெல்வது எனது முடிக்கப்படாத வேலை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பையை வெல்வது எனது முடிக்கப்படாத வேலை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை தொடர் நேற்று முன் தினம் தொடங்கியது. உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி நாளை (அக்டோபர் 8) சென்னையில் தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடவுள்ளது. இந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, உலகக் கோப்பையை வெல்வது எனது முடிக்கப்படாத வேலை எனத் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிக்க: உலகக் கோப்பையில் வரலாற்றுச் சாதனை படைத்த தென்னாப்பிரிக்கா!
இது தொடர்பாக அவர் பேசியதாவது: உலகக் கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள். அதுதான் எங்களது நோக்கமும் கூட. உலகக் கோப்பையை வெல்வது என்பது ஒருவரது கிரிக்கெட் பயணத்தில் மிகப் பெரிய தருணம். மீண்டும் உலகக் கோப்பையை கைப்பற்ற நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அதற்கு வீரர்கள் சில விஷயங்களை பின்பற்ற வேண்டியிருக்கும். கோப்பையை வென்றே தீர வேண்டும் என இருப்பது நல்லது. வெற்றி பெற்றாக வேண்டும் என்ற பசியுடனும் இருக்க வேண்டும்.
இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு அழுத்தமான சூழல்களை கையாளத் தெரியும். 99 சதவிகிதம் வீரர்களின் சிறப்பான உழைப்பும், 1 சதவிகிதம் அதிர்ஷ்டமும் வேண்டும் என்பதை மறுத்துவிட முடியாது. எங்களுக்கு அந்த ஒரு சதவிகித அதிர்ஷ்டம் இருக்கும் என்று நம்புகிறேன். உலகக் கோப்பையை வெல்வது சிறப்பான தருணம். கடந்த 16 ஆண்டு கால கிரிக்கெட் அனுபவத்தில் ஆட்டத்தில் ஏற்படும் அழுத்தங்களை திறம்பட கையாள கற்றுக் கொண்டேன். உலகக் கோப்பையை வெல்வது என்பது எனது முடிக்கப்படாத வேலை என்றார்.