முகப்பு
செய்திகள்

இந்தியா ஒலிம்பிக்கை நடத்துவதற்கான நேரம் வந்துவிட்டது: பி.டி.உஷா

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் சிறப்பான செயல்பாட்டைத் தொடர்ந்து, இந்தியாவில் 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த திட்டமிடும் அரசுக்கு இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் ஆதரவு.

Updated On : 8 அக்டோபர், 2023 at 8:35 PM
பகிர்:

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் சிறப்பான செயல்பாட்டைத் தொடர்ந்து, இந்தியாவில் 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த திட்டமிடும் அரசுக்கு இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் பி.டி.உஷா ஆதரவளித்துள்ளார்.

சீனாவில் நடைபெற்று வந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்தன. ஆசிய விளையாட்டுப் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு இந்தியா முதல்முறையாக 100-க்கும் அதிகமான பதக்கங்களை வென்று குவித்தது. இந்தியா 107 பதக்கங்களுடன் (28 தங்கம், 38  வெள்ளி, 41 வெண்கலம்) பதக்கப் பட்டியலில் நான்காம் இடம் பெற்று நிறைவு செய்தது.

இந்த நிலையில், இந்தியாவில் 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த திட்டமிடும் அரசுக்கு இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் பி.டி.உஷா ஆதரவளித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு சாதனை படைத்துள்ளது. இதுபோன்று நமது நாட்டில் உள்ள வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு அமைப்புகள் கடினமாக உழைத்தால் நம்மால் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இரட்டை இலக்கத்தில் பதக்கங்களை வெல்ல முடியும் என நினைக்கிறேன். இந்தியாவில் விளையாட்டை ஊக்குவிக்கவும், விளையாட்டு வீரர்களின் நலனுக்காவும் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் விளையாட்டுத் துறை  முன்னேற்றத்தில் பிரதமர் அதிக ஈடுபாடு கொண்டுள்ளார். இந்தியா ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான தருணம் வந்துவிட்டது. 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.