பஞ்சாப் அணியுடனான 14 ஆண்டு கிரிக்கெட் பயணத்தை முடிவுக்கு கொண்டுவந்த மந்தீப் சிங்!
இந்திய வீரரான மந்தீப் சிங் உள்ளூர் போட்டிகளில் பஞ்சாப் அணியிலிருந்து விலகி திரிபுராவுக்காக விளையாடவுள்ளார்.
இந்திய வீரரான மந்தீப் சிங் உள்ளூர் போட்டிகளில் பஞ்சாப் அணியிலிருந்து விலகி திரிபுராவுக்காக விளையாடவுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் மந்தீப் சிங் கடந்த 14 ஆண்டுகளாக உள்ளூர் போட்டிகளில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில், எதிர்வரும் சீசனில் திரிபுரா அணிக்காக விளையாடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்துடன் இத்தனை ஆண்டுகளாக இணைந்து பயணித்தது சிறப்பானதாக இருந்தது. எனது கிரிக்கெட் பயணத்தின் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதற்கான நேரம் வந்துவிட்டதாக நினைக்கிறேன்.
இத்தனை ஆண்டுகளாக எனக்கு ஆதரவளித்து வந்த பஞ்சாப் கிரிக்கெட் சங்கத் தலைவர் தில்ஷேர் கண்ணா, இந்திய அணியின் முன்னாள் வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். திரிபுரா அணியில் இணைந்து விளையாடவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. திரிபுராவுடன் இணைந்து இன்னும் பல சாதனைகள் படைக்க உள்ளேன் எனப் பதிவிட்டுள்ளார்.
99 உள்ளூர் போட்டிகளில் விளையாடியுள்ள மந்தீப் சிங் 6,448 ரன்கள் குவித்துள்ளார். அதில் 15 சதங்கள் அடங்கும். அவரது சிறந்த ஸ்கோர் 235. மந்தீப் சிங் இந்திய அணிக்காக கடந்த 2016 ஆம் ஆண்டு ஜிம்பாப்வேவுக்கு எதிராக 3 டி20 போட்டிகளில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.