சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின்(ஐசிசி) தலைவாராக ஜெய் ஷா தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐசிசியின் தலைவராக இருக்கும் கிரெக் பார்க்லேவின் பதவிக் காலம் வருகின்ற நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை ஐசிசி நிர்வாகம் தொடங்கியுள்ளது.
இரண்டு ஆண்டுகள் பதவிக் காலம் கொண்ட ஐசிசி தலைவர் பதவியில் ஒருவர் மூன்று முறை வகிக்கலாம். கிரெக் பார்க்லே, தொடர்ந்து இரண்டு முறை ஐசிசி தலைவராக உள்ள நிலையில், மூன்றாவது முறை போட்டியிடப் போவதில்லை என்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரும், மத்திய உள்துறை அமைச்சர் ஜெய் ஷாவின் மகனுமான ஜெய் ஷா, ஐசிசி தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐசிசி தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்ய ஆகஸ்ட் 27 கடைசி நாள் என்பதால், ஜெய் ஷா போட்டியிடுகிறாரா என்பது இந்த வாரத்துக்குள் தெரிந்துவிடும்.
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தலைவர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்யலாம். ஒருவருக்கு மேல் வேட்புமனுத் தாக்கல் செய்யும் பட்சத்தில் டிசம்பர் 1ஆம் தேதி தேர்தல் நடைபெறும்.
ஐசிசியின் செல்வாக்குமிக்க முகமாக உள்ள ஜெய் ஷா, நிதி மற்றும் வணிக விவகாரங்கள் துணைக் குழுவின் தலைவராக உள்ளார். ஜெய் ஷா போட்டியிட்டால் அனைத்து உறுப்பினர்களும் ஆதரவளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஐசிசி தலைவராக ஜெய் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டால், இளம் தலைவர்(வயது 35) என்ற வரலாற்றை படைப்பார்.
இதற்கு முன்னதாக, ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், என். சீனிவாசன் மற்றும் ஷஷாங்க் மனோகர் ஆகியோர் ஐசிசியின் தலைவர் பதவியில் இருந்த இந்தியர்கள் ஆவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.