19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை சூப்பர் 6 சுற்றில் 214 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தியது.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையின் சூப்பர் 6 சுற்றின் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்தது. இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 295 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தரப்பில் சிறப்பாக விளையாடிய முஷீர் கான் சதம் விளாசி அசத்தினார். அவர் 131 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஆதர்ஷ் சிங் 52 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் மேசன் கிளார்க் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி வெறும் 81 ரன்களுக்கே ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஆஸ்கர் ஜாக்சன் 19 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில், 28.1 ஓவர்களில் நியூசிலாந்து 81 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய சௌமி பாண்டே 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ராஜ் லிம்பானி மற்றும் முஷீர் கான் தலா 2 விக்கெட்டுகளையும், நமன் திவாரி மற்றும் அர்ஷின் குல்கர்னி தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முஷீர் கானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.