இருவர் சதம், மூவர் அரைசதம்; வலுவான நிலையில் இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 255 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 255 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நேற்று (மார்ச் 7) தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஸாக் கிராலி 79 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோ 29 ரன்களும், பென் டக்கெட் 27 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணியின் தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
Advertisement
Advertisement
இதனையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். இருப்பினும், ஜெய்ஸ்வால் 57 ரன்களில் சோயிப் பஷீர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரோஹித் சர்மா 52 ரன்களுடனும், ஷுப்மன் கில் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், இன்று (மார்ச் 8) இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. சிறப்பாக விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் சதமடித்து அசத்தினர். ரோஹித் சர்மா 103 ரன்களிலும், ஷுப்மன் கில் 110 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த, தேவ்தத் படிக்கல் மற்றும் சர்ஃபராஸ் கான் அரைசதம் எடுத்து அசத்தினர். சர்ஃபராஸ் கான் 56 ரன்களிலும், படிக்கல் 65 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து தரப்பில் சோயிப் பஷீர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். டாம் ஹார்ட்லி 2 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 473 ரன்கள் எடுத்துள்ளது. குல்தீப் யாதவ் 27 ரன்களுடனும், ஜஸ்பிரித் பும்ரா 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்திய அணி இங்கிலாந்தைக் காட்டிலும் 255 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.