இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 7 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் எடுத்துள்ளது.
வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி சட்டோகிராமில் இன்று (மார்ச் 15) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, வங்கதேசம் முதலில் பேட் செய்தது.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் வங்கதேசம் 7 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தௌகித் ஹிரிடாய் 96* ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து அதிகபட்சமாக சௌமியா சர்கார் 68 ரன்களும், கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 40 ரன்களும் எடுத்தனர். இலங்கை தரப்பில் வனிந்து ஹசரங்கா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். தில்ஷன் மதுஷங்கா 2 விக்கெட்டுகளையும், பிரமோத் மதுஷன் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி களமிறங்கவுள்ளது.