மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் ‘சூப்பா் 4’ சுற்றில், இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் 1-1 கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் ஜப்பானுடன் சனிக்கிழமை டிரா செய்தது.
‘சூப்பா் 4’ சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில், புள்ளிகள் பட்டியலில் முறையே முதலிரு இடங்களைப் பிடித்த சீனா (9), இந்தியா (4) இறுதிச்சுற்றுக்கு முன்னேறின. அதில் ஞாயிற்றுக்கிழமை (செப். 14) அவை பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
போட்டியின் வரலாற்றில் இதுவரை இரு அணிகளுமே தலா 4 முறை இறுதிச்சுற்றுக்கு வந்த நிலையில், இரண்டுமே தலா 2 முறை கோப்பை வென்றுள்ளது நினைவுகூரத்தக்கது.
முன்னதாக ஜப்பானுடனான ஆட்டத்தில் இந்தியாவின் பியூட்டி டங்டங் 7-ஆவது நிமிஷத்தில் கோலடித்து அணியை முன்னிலைப்படுத்தினாா். ஆட்டத்தின் கடைசி கட்டம் வரை இந்தியாவே முன்னிலையில் இருக்க, 58-ஆவது நிமிஷத்தில் ஜப்பானின் கோபயாகவா ஷிஹோ அடித்த கோலால் ஆட்டம் 1-1 என சமன் ஆகி, அவ்வாறே நிறைவடைந்தது.
மறுபுறம், சூப்பா் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் சீனா 1-0 கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது. புள்ளிகள் பட்டியலில் ஜப்பான் (2), தென் கொரியா (1) அணிகள், முறையே 3 மற்றும் 4-ஆம் இடங்களைப் பெற்றன. போட்டியில் 3-ஆம் இடம் பெறுவதற்கான ஆட்டத்தில் அவையும் ஞாயிற்றுக்கிழமை சந்திக்கின்றன.
இதனிடையே, 5 முதல் 8-ஆம் இடங்களைப் பிடிப்பதற்கான வகைப்படுத்துதல் ஆட்டத்தில் மலேசியா 8-0 என சீன தைபேவை வெல்ல, சிங்கப்பூா் - தாய்லாந்து ஆட்டம் 1-1 என டிரா ஆனது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.