பல்லடம் அருகே பொன்நகரில் இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள்
பல்லடம் : பல்லடம் அருகிலுள்ள பொன்நகரில் 18 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளின் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் இருப்பதால், இவ் வீடுகளில் வாழ்வோர் ஆபத்தான நிலையில் வசித்து வருகின்றனர். த
பல்லடம் : பல்லடம் அருகிலுள்ள பொன்நகரில் 18 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளின் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் இருப்பதால், இவ் வீடுகளில் வாழ்வோர் ஆபத்தான நிலையில் வசித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றியம், கரைப்புதூர் ஊராட்சி, பொன்நகரில் 1991-92ம் ஆண்டு 30 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டன. இதில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பலர் விசைத்தறிக் கூடங்களிலும், பனியன் கம்பெனிகளிலும், விவசாயக் கூலி வேலைக்கும் சென்று வருகின்றனர். 18 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இவ் வீடுகளில் மேற்கூரை விரிசலடைந்தும், வீட்டின் உட்புறம் காரை பெயர்ந்தும் பல இடங்களில் இரும்புக் கம்பிகள் வெளிப்பட்டும் காணப்படுகின்றன.
காரை அவ்வப்போது இடிந்து விழுவதால் இவ் வீடுகளில் வசிப்போர் பலர் இரவு நேரத்தில் வீட்டில் உறங்குவதில்லை. அருகில் குடிசைகள் அமைத்தும், ஒரளவு நல்ல நிலையிலுள்ள பக்கத்து வீடுகளில் அடைக்கலம் புகுந்தும் உறங்குகின்றனர்.
கடந்த ஒரு மாதமாக பெய்த தொடர் மழையால் இந்தத் தொகுப்பு வீடுகளின் மேற்கூரை மேலும் சேதம் அடைந்துள்ளது. வீட்டின் உள்ளே மழைநீர் ஒழுகுகிறது. உணவுக்குப் பயன்படுத்தும் மளிகைப் பொருட்களைப் பாதுகாக்கவும், உடுத்தும் துணிகளைப் பாதுகாக்கவும் பலர் பாலிதீன் கவரால் மூடி வைத்துள்ளனர்.
தலைக்கு மேல் ஆபத்துடன் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத வாழ்க்கை வாழும், தொகுப்பு வீடுகளில் வசிக்கும் ஏழை மக்கள் கூறியது:
பழுதடைந்த வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடு கட்டவோ, அல்லது பழுதை சரி செய்யவோ எங்களிடம் பணம் இல்லை. தினசரி வேலைக்குச் சென்று வந்தால்தான் உணவு என்ற நிலையில் உள்ளோம். மாற்று இடம் இல்லாததால் ஒவ்வொரு வீட்டிலும் அதிக எண்ணிக்கையில் வசிக்கிறோம். எங்களின் நிலை குறித்து கரைப்புதூர் ஊராட்சி மன்றம், பல்லடம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் ஆகியவற்றுக்கு ஏற்கனவே தெரிவித்துள்ளோம். நிதி இல்லை என்று கூறி எங்களைக் கைவிட்டு விட்டனர்.
தினமும் ஆபத்துடன் வாழும் எங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிய வீடுகள் கட்டித் தரவோ அல்லது மராமத்துப் பணி செய்து தரவோ வேண்டும். என்றனர்.