கத்தரிக்காயில் "கனத்த லாபம்' பார்க்கும் விவசாயிகள்
திருத்தணி, ஜூலை 7: திருத்தணி அருகே கே.ஜி. கண்டிகை பகுதியில் கத்தரிக்காய் விளைச்சல் அமோகமாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதால், கடந்த
திருத்தணி, ஜூலை 7: திருத்தணி அருகே கே.ஜி. கண்டிகை பகுதியில் கத்தரிக்காய் விளைச்சல் அமோகமாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதால், கடந்த ஆறு மாதங்களாக நெல் விவசாயத்தில் பெருமளவு லாபத்தைப் பார்க்க முடியவில்லை. இதனால், மிகவும் கவலையில் இருந்த விவசாயிகளுக்கு நம்பிக்கை தரும் விதமாய் அமைந்திருக்கிறது தற்போதைய கத்தரிக்காய் விளைச்சல்.
பங்குனியில் நடவு செய்து சித்திரையில் அறுவடை செய்யக்கூடிய குறுகிய காலப்பயிர் கத்தரிக்காய். வெயில் காலத்திலும் செழித்து வளரக்கூடிய இப்பயிரை கே.ஜி.கண்டிகை, செருக்கனூர், ராமகிருஷ்ணாபுரம், நொச்சலி, செஞ்சிகண்டிகை, என்.எம்.ஆர். கண்டிகை, உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அதிகளவு சாகுபடி செய்துள்ளனர்.
கத்தரிக்காய் விதை ஏக்கருக்கு இரண்டு கிலோ தேவை. இரண்டு கிலோ விதை விலை ரூ. 2,600. உழவு செய்ய டிராக்டர் கூலி, தண்ணீர் பாய்ச்சும் செலவு என ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் செலவாகும். ஒரு ஏக்கருக்கு மூன்று டன் கத்தரிக்காய் விளைச்சல் கிடைக்கிறது. இதன் மூலம் சரியான லாபம் கிடைப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.இங்கு விளைச்சலாகும் கத்தரிக்காய் சென்னை, வேலூர், திருவள்ளூர், திருத்தணி மற்றும் ஆந்திர மாநிலம் நகரி, புத்தூர் ஆகிய பகுதிகளிலும் மொத்த விற்பனைக்குச் செல்கிறது. இதுகுறித்து விவசாயி கோவிந்தன் கூறியதாவது: கோடை காலத்தில் எல்லா பயிர்களும் குறைந்தளவே விளைச்சல் தரும். ஆனால், கத்தரிக்காய் மட்டும் நன்கு செழித்து வளரும். இதனால்தான், வெயில் காலத்தில் கத்தரிக்காயை பயிரிட்டு லாபம் பார்க்கிறோம் என்றார்.
ஏக்கருக்கு மூன்று டன் விளைச்சல் கிடைக்கிறது. கிலோவுக்கு 15 முதல் 18 ரூபாய் வரை மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். ஆனால் சந்தையில் 25 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பாடுபட்டு பயிர் செய்து விளைச்சல் தரும் எங்களுக்கு முழுப்பலன் கிடைக்கவில்லை. எனவே அரசாங்கம் உழவர் சந்தைகளில் நியாயமான விலையில் கொள்முதல் செய்தால் எங்களுக்கு மேலும் வருமானம் கிடைக்கும் என்றும் கோவிந்தன் கூறுகிறார்.
""இடைதரகர்களுக்கு லாபம் செல்வதால் எங்களை போன்ற விவசாயிகள் பாதிப்படைகிறோம். இருப்பினும் மற்ற பயிர்களை பயிர்செய்து பெருத்த நஷ்டம் அடைவதைவிட கத்தரிக்காய் பயிர் செய்வதன் மூலம் ஓரளவுக்காவது லாபம் கிடைப்பது ஆறுதலாக உள்ளது'' என்கின்றனர் விவசாயிகள்.