பட்டாசுகளை வெடிப்பதில் சென்னை முதலிடம்
சென்னை, நவ.6: தமிழகத்திலேயே தீபாவளி பட்டாசுகளை வெடிப்பதில் சென்னை முதலிடம் பெற்றுள்ளது. இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது அதிக அளவு பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால், இதுவரை இல்லாத அளவில் மாசு அதிகரித்
சென்னை, நவ.6: தமிழகத்திலேயே தீபாவளி பட்டாசுகளை வெடிப்பதில் சென்னை முதலிடம் பெற்றுள்ளது.
இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது அதிக அளவு பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால், இதுவரை இல்லாத அளவில் மாசு அதிகரித்துள்ளது.
இதற்கு, வானில் பாய்ந்து அதிக உயரத்தில் பல நிமிடங்கள் வரை புகையுடன் வெடித்துச் சிதறும் வாண வெடிகளை அதிக அளவில் வெடிப்பதும் ஒரு காரணம் என்று
தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் ரூ. 2 ஆயிரம் கோடிக்கும் மேல் பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு பட்டாசு விற்பனை கடந்த ஆண்டை விட அதிகமாக இருந்தது.
வெடிப்பதிலும் சென்னை முதலிடம்: சென்னையில் மட்டும் இந்த ஆண்டு ரூ. 400 கோடிக்கும் மேல் பட்டாசு கொள்முதல் செய்யப்பட்டது. இயல்பான கால நிலை நீடித்ததால், பட்டாசு விற்பனையில் பாதிப்பு ஏதும் இல்லை. இதனால், அனுமதி பெற்ற கடைகள் முதல் அனுமதி பெறாத கடைகளிலும் விற்பனை உச்சத்தை எட்டியது.
இதுதவிர குடிசைத் தொழில் முறையில் சிறிய அளவில் தயாரிக்கப்படும் பட்டாசுகள்,
கிலோ கணக்கில் கொள்முதல் செய்யப்பட்டு, வீதியோரக் கடைகளில் ஏராளமாக விற்பனை செய்யப்பட்டன. இந்தப் பட்டாசுகளின் பேக்கிங்கில் விலை விவரம் எதுவும் இருக்காது. இதனால், அரசுக்கு பெருமளவு வரி வருவாய் இழப்பு ஏற்படுவதாகத் தெரியவந்துள்ளது.
தமிழகத்திலேயே மிக அதிகபட்சமாக சென்னை தங்கசாலை பகுதியில்தான் அதிக அளவில் பட்டாசு கொள்முதல் செய்யப்படுகிறது. இதே போல, இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தான் அதிக அளவு பட்டாசுகளையும் வெடிப்பதாக பட்டாசு விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தவிர ஆன்லைன் முறையில் பேரளவிலான பட்டாசு தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக சென்னைவாசிகள் கொள்முதல் செய்வதும் அதிகரித்துள்ளது.
இதனால், நகரில் தீபாவளி நாள்களில் பட்டாசுகளின் குப்பைகள் வீதிகள்தோறும் 200 டன் அளவுக்கு மலைபோல் குவிந்தன.
200 மடங்கு மாசு அதிகரிப்பு: எனினும், பட்டாசுகளை வெடிக்கும் போது, காற்றில் கலக்கும் கந்தக டை-ஆக்சைடு காரணமாக, உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள பாதுகாப்பு அளவை விட, 200 மடங்கு கூடுதலாக காற்றும், சூழலும் மாசுபடுவதாக பூனா நகரைச் சேர்ந்த சி.ஆர்.எப். அமைப்பு நடத்திய ஆய்வில்ó தெரியவந்துள்ளது.
பொதுவாக பட்டாசுகளில் 75 சதவீதம் பொட்டாசியம், 15 சதவீதம் கார்பன், 10 சதவீதம் கந்தகம் கலந்த வெடிபொருள்கள் இருக்கும். இந்தப் பட்டாசுகளை வெடிக்கும்போது, பெருமளவு கந்தக டை ஆக்சைடு, கரியமில வாயு, கார்பன் மோனாக்சைடு, கேட்மியம் உள்ளிட்ட நச்சு வாயுக்கள் வெளியாகின்றன.
சுவாச நோய் பாதிப்பு: இதன் காரணமாக குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஆஸ்துமா, சிஓபிடி, ஐபிஎப், பிரான்கிடிஸ் உள்ளிட்ட பல்வேறு சுவாசக் கோளாறுகள் ஏற்படுகின்றன.
ஆண்டுதோறும் தீபாவளி சீசன் தொடங்கி, பிப்ரவரி மாதம் வரை சுவாசக் கோளாறு தொடர்பான நோய்களால் பாதிக்கப்படும் புறநோயாளிகளின் எண்ணிக்கை 30 முதல் 40 சதவீதம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக ஆஸ்துமா அண்ட் ஒவ்வாமை சிகிச்சை மையத்தின் தலைவர் டாக்டர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு: இந்த ஆண்டு, தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகளை வெடித்ததால் சென்னை உள்பட தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் திங்கள்கிழமை முதல் விரிவான ஆய்வுகளை நடத்த உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
எனினும், இதுகுறித்து சென்னையில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் பேசுவதற்கு தொலைபேசியில் முயன்றபோது அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.