முகப்பு
தமிழ்நாடு

இந்த ஆண்டு 7,001 குரங்குகள், 639 பாம்புகள் மீட்பு

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் இந்த ஆண்டு 7 ஆயிரத்து 750 வனவிலங்குகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் அதிகளவில் குரங்குகள் மீட்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Updated On : 21 டிசம்பர், 2013 at 2:38 AM
பகிர்:
Updated On : 4 ஜனவரி, 2024 at 12:51 AM

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் இந்த ஆண்டு 7 ஆயிரத்து 750 வனவிலங்குகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் அதிகளவில் குரங்குகள் மீட்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மொத்தம் 7 ஆயிரத்துக்கும் அதிகமான குரங்குகள், 639 பாம்புகள், 27 மான்கள், 3 மயில்கள், ஒரு முதலை உள்ளிட்ட உயிரினங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மான், மயில், கீரி, முதலை, மரநாய் உள்ளிட்ட வனவிலங்குகள் அவற்றின் வாழ்விடங்களில் இருந்து வழிதவறி சாலைகளுக்கு வந்து விடுகின்றன. அவ்வாறு சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வழிதவறி வந்த வனவிலங்குகள் மற்றும் உயிரினங்களை வன உயிரின காப்பக அதிகாரிகள் மீட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்று விடுகின்றனர்.

Advertisement

அதன்படி, இந்த ஆண்டு பாம்புகள் மற்றும் குரங்குகள் அதிக அளவில் மீட்கப்பட்டன. இதைத் தவிர நெடுங்குன்றம் பகுதியில் வழிதவறி வந்த ஒரு முதலையும் மீட்கப்பட்டு அதன் வாழ்விடத்தில் திரும்ப விடப்பட்டது.

இதே போல நகரில் பாதுகாப்பின்றி சுற்றிக் கொண்டிருந்த மான், மயில், கீரி, கூழைக்கடா, குளத்தாமை, நட்சத்திர ஆமை, நீர்க் காகம் உள்ளிட்ட உயிரினங்களை வனக்காப்பாளர்கள் மீட்டுள்ளனர்.

அவற்றில் சில மான்கள் மற்றும் குரங்குகள் சாலை விபத்தில் சிக்கி காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும், அவற்றுக்கு முதலுதவி அளித்து தொலைதூரக் காடுகளுக்கு கொண்டு சென்றுவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வன உயிரின காப்பக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கடந்த ஆண்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வனவிலங்குகள் மற்றும் வன உயிரினங்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்று விடப்பட்டன. அவற்றில் 2,266 பாம்புகளும், 8,311 குரங்குகளும் அடங்கும்.

கடந்த ஆண்டில் ஒரு நரியும், எறும்பு தின்னியும் மீட்கப்பட்டு காட்டில் கொண்டு விடப்பட்டது. நகருக்குள் வழிதவறி வரும் வன உயிரினங்களை மீட்கவும், அவற்றுக்கு முதலுதவி அளிக்கவும் ஆம்புலன்ஸ் வசதியுடன் கூடிய வாகனம் பயன்படுத்தப்படுகிறது.

இந்த ஆண்டில் இதுவரை 7,750 வன உயிரினங்கள் மீட்கப்பட்டுள்ளன. சைதாப்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் அதிக அளவில் மான்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட விலங்குகள் அனைத்தும் 5 நாள்கள் கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட்டு அடர்ந்த காடுகளுக்குள் திரும்ப விடப்பட்டதாக தெரிவித்தார் அவர்.

இந்த ஆண்டு மீட்கப்பட்ட வன உயிரினங்களின் விவரம்:

குரங்கு 7001

பாம்பு 639

ஆந்தை 42

மான் 27

குளத்தாமை 8

நட்சத்திர ஆமை 4

மயில் 3

கீரி 2

கூழைக்கடா 2

நீர்க்காகம் 1

மரநாய் 1

முதலை 1

இவற்றைத் தவிர மைனா, வெளவால், கொக்கு, குயில், பருந்து, பச்சோந்தி, கிளி உள்ளிட்ட உயிரினங்களும் மீட்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.