முகப்பு
தமிழ்நாடு

வேறொருவருடன் இருந்த மனைவியை கண்டித்த கணவன் அடித்துக்கொலை: 23 நாட்களுக்கு பின் கிணற்றில் இருந்து உடல் மீட்பு

தேவாரம் அருகே, அடித்து துன்புறுத்திய கணவரை கொலை செய்த வழக்கில் மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 3 பேரை

Updated On : 10 ஜூன், 2014 at 4:02 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 11:03 AM

தேவாரம் அருகே, அடித்து துன்புறுத்திய கணவரை கொலை செய்த வழக்கில் மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

     தேவாரம் அருகே டி.மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி(52). விவசாயி. இவருக்கு சந்தன மாரியம்மாள்(45) என்ற மனைவியும், செல்லராஜா, நடராஜ், கயல்விழி, மின்னல்கொடி ஆகிய மகன், மகள்களும் உள்ளனர். ராஜாமணியின் மனைவி சந்தனமாரியம்மாள் கட்டுமான பணிகளுக்கு செல்வாராம்.

இந்நிலையில் கடந்த 16.5.2014-ஆம் தேதி ராஜாமணி காணாமல் போனதாக  தேவாரம் காவல் நிலையத்தில் புகார் செய்ததன் பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராஜாமணியை தேடி வந்தனர்.

Advertisement

     இந்நிலையில் டி.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த சீனிவாசகன்(42) என்பவர் அங்குள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்து ராஜாமணியை கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து போலீஸார் அவரை விசாரணை செய்ததில் கிடைத்த விவரம் வருமாறு:

 ராஜாமணி மாயமான 2 நாட்களுக்கு முன்பு, சந்தனமாரியம்மாள் வேறொருவருடன் இருந்ததை நேரில் பார்த்து கண்டித்து அடித்துள்ளார். இதனால், உள்ளூரில் உள்ள தாய் வீட்டுக்கு சந்தனமாரியம்மாள் சென்றுவிட்டார்.  இதுகுறித்து சந்தனமாரியம்மாள் தனது தம்பி கருப்பையா மகன் சீனிவாசகன் என்பவரிடம் கூறியுள்ளார்.

     இதனையடுத்து சீனிவாசகன் தனது மைத்துனரான ராஜாமணியை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

இதற்கு துணையாக தனது நண்பர்கள் டி.மல்லிங்காபுரத்தை சேர்ந்த மாரிச்சாமி மகன் கணேசன் (40), டி.மீனாட்சிபுரத்தை சேர்ந்த செந்தில் (29), மல்லிங்காபுரத்தை சேர்ந்த மற்றொரு கணேசன் (39), தேவாரத்தை சேர்ந்த மாரியப்பன் (38) ஆகியோரை சேர்த்துக்கொண்டார்.

     இதில் மாரியப்பனும், ராஜாமணியும் பழக்கமானவர்கள் என்பதால் மாரியப்பன் ராஜாமணியை மல்லிங்காபுரத்தில் உள்ள மா.கணேசன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து ராஜாமணியை சீனிவாசகன் கழுத்தை துண்டால் இறுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் ராஜாமணியின் சடலத்தை மல்லிங்காபுரத்தில் உள்ள ஒருவரின் கிணற்றில் சாக்கில் கட்டி தூக்கி வீசிவிட்டு வந்துவிட்டனர்.

     இதனையடுத்து தேவாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீஸார் ராஜாமணி காணாமல் போன வழக்கை கொலை வழக்காக மாற்றினர்.

அழுகிய நிலையில் காணப்பட்ட ராஜாமணியின் சடலத்தை கம்பம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) மு.சோனை, தீயணைப்பு வீரர்கள் ரங்கபிரபு, ஆனந்தன், ரமேஷ்கண்ணன், செந்தில் ஆகியோர் 3 மணி நேரம் போராடி மீட்டனர்.

பின்னர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராஜாமணியை கொலை செய்த சீனிவாசகன், மாரிச்சாமி மகன் கணேசன் மற்றும் ராஜாமணியின் மனைவி சந்தன மாரியம்மாள் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மற்றொரு கணேசன், செந்தில், மாரியப்பன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.