பராமரிப்பில்லாததால் பாழாகும் இரும்புக் கம்பிகள்...
இலவச வீடுகள் வழங்கும் திட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்படுவதற்காக ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள டன் கணக்கான கட்டுமான இரும்புக் கம்பிகள் உரிய பராமரிப்பில்லாததால் துருப்பிடித்து வருகின்றன.
இலவச வீடுகள் வழங்கும் திட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்படுவதற்காக ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள டன் கணக்கான கட்டுமான இரும்புக் கம்பிகள் உரிய பராமரிப்பில்லாததால் துருப்பிடித்து வருகின்றன.
வீடுகள் இல்லாத ஏழை எளிய மக்களுக்காக மானியத்துடன் கூடிய மத்திய அரசின் சார்பில் இந்திரா காந்தி நினைவு குடியிருப்புத் திட்டம், மாநில அரசின் சார்பில் பசுமை வீடுகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டங்கள் மூலமாக ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள 58 கிராம பஞ்சாயத்துகளில் ஏராளமான பயனாளிகள் வீடுகள் கட்டி வருகின்றனர். இந்தப் பயனாளிகளுக்காக வழங்கப்பட உள்ள கட்டுமானத்துக்குத் தேவையான இரும்புக் கம்பிகள் ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு இல்லாமல் வெட்ட வெளியில் வைக்கப்பட்டுள்ளன.
இதனால் மழையில் நனையும் இரும்புக் கம்பிகள், துருப்பிடித்து கட்டடம் கட்டுவதற்கு தகுதியற்ற நிலையில் மாறி வருகிறது.
இதனால் அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து வீடு கட்டி வரும் பயனாளி ஒருவர் கூறியது:
அரசு மானியத்துடன் கட்டப்பட்டு வரும் வீடுகளுக்கு இந்தக் கம்பிகளைத்தான் அதிகாரிகள் வழங்கி வருகின்றனர்.
ஆனால் இந்தக் கம்பிகள் உரிய பாதுகாப்பு இல்லாமல் வெட்டவெளியில் தரையில் போடப்பட்டுள்ளதால் மழையில் நனைந்து துருப்பிடித்து உள்ளது.
இவற்றை கட்டுமானத்துக்குப் பயன்படுத்தினால் கட்டடத்தின் உறுதித் தன்மை பாதிக்கப்படும். எனவே பயனாளிகளுக்காக வழங்கப்பட உள்ள இரும்புக் கம்பிகளை அதிகாரிகள் பாதுகாப்பான இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.