பாபநாசம், மணிமுத்தாறு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!
பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
குற்றாலம் சீசன் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதியிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். குற்றாலத்திற்கு சுற்றுலா வரும் பயணிகள் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளில் குளிக்க தவறாமல் வருகை தருகின்றனர்.
விடுமுறை தினமான சனி, ஞாயிற்றுக்கிழமை பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கணிசமாக அதிகமாக இருந்தது. பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு 600 க்கும் மேற்பட்ட வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததால், அருவிச் சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இதேபோல், மணிமுத்தாறு அருவியிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சென்னை, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, ராமனாதபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து அருவிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர்.
அருவிகளுக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததால், வனப்பகுதியில் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளை வலியுறுத்தினர்.