முகப்பு
தமிழ்நாடு

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பணிக்காக காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடம் இருந்து உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அலுவலர் தெரிவித்துள்ளார்.

Updated On : 2 அக்டோபர், 2015 at 5:21 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:22 PM

விருதுநகர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பணிக்காக காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடம் இருந்து உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அலுவலர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராமநாதன் வெள்ளிக்கிழமை  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்த மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியை பதிவு செய்து 5 ஆண்டுகளாக பணிக்காக காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதந்தோறும் அரசு உதவித் தொகை வழங்குகிறது.

இதில், பயனடைய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு 45 வயதிற்குள்ளும், இதர வகுப்பினருக்கு 40 வயதிற்குள்ளும் இருப்பது அவசியம் ஆகும். அதோடு, ஒவ்வொருநாளும் கல்லூரிக்கு செல்கிறராகவோ, பணிபுரிந்து வருகிறவராகவோ அல்லது சுயதொழில் செய்கிறவராகவோ இருத்தல் கூடாது.

Advertisement

இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட கல்வித் தகுதியின் அடிப்படையிலேயே இத்தொகை அளிக்கப்படுகிறது. இதற்கு ஒவ்வொருவரும் தேசிய வங்கிக் கிளை ஒன்றில் கணக்கு தொடங்கியிருக்க வேண்டும். இதில், எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.100ம், தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.150ம், பிளஸ்2 தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு மாதந்தோறும் ரூ.200ம், பட்டப்படிப்பு பதிவு செய்தவர்களுக்கு ரூ.300ம் என உதவி தொகை வழங்கப்பட இருக்கிறது.

மாற்றுத்திறனாளி பதிவுதாரர்கள் கட்டாயம் தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். இவர்களுக்கு மட்டும் கல்வித் தகுதியை பதிந்து ஓராண்டுக்குள் இருந்தால் போதுமானாது. இதில், எஸ்.எஸ்.எல்.சி மற்றும் அதற்கும் குறைந்த வகுப்பு பதிவு செய்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.300ம், பிளஸ்2 தேர்ச்சி பெற்று பதிவு செய்தவர்களுக்கு ரூ.375ம், பட்டப்படிப்பு பதிவு செய்தவர்களுக்கு ரூ.450ம் என உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்தொகையை பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் வருமான உச்சவரம்பு எதுவும் கிடையாது.

இத்தொகை காலாண்டு தோறும் கணக்கு சரிபார்த்து, நேரடியாக அவரவர் வங்கிக் கணக்குகளின் மூலம் விடுவிக்கப்படும். இத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் விலையில்லாமல் விநியோகம் செய்யப்படுகிறது. அதைப் பெற்று பூர்த்தி செய்து அலுவலகத்தில் நேரில் அளித்து பயனடையலாம். இத்திட்டம் நடைமுறையில் இருந்து வருவதால், ஏற்கனவே இத்தொகை பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பம் அளிக்க தேவையில்லை. அதோடு, நிகழாண்டிற்கான சுய உறுதி மொழி ஆவணம் சமர்பிக்காத வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விரைவில் அளிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.