முகப்பு
தமிழ்நாடு

விருதுநகர் பகுதியில் முறைகேடு செய்யும் வணிகவரித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

விருதுநகர் மாவட்டத்தில் ஆய்வு என்கிற பேரில் வசூல் செய்து  முறைகேடுகளில் ஈடுபடும் வணிக வரித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறு பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On : 28 செப்டம்பர், 2015 at 9:01 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:19 PM

விருதுநகர் மாவட்டத்தில் ஆய்வு என்கிற பேரில் வசூல் செய்து  முறைகேடுகளில் ஈடுபடும் வணிக வரித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறு பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சிறுபட்டாசு ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் விநாயகமூர்த்தி, வணிகவரித்துறை இணை ஆணையாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 900-க்கும் மேற்பட்ட பெரியதும், சிறிதயதும் ஆன பட்டாசு ஆலைகள் உள்ளன. இங்கு தயாரித்த பட்டாசுகள் விற்பனையாகமல் தேக்கம் அடைந்து உள்ளன. இந்நிலையில், வணிகவரித்துறை அதிகாரிகள் கடந்த 15-ம் தேதி முதல் திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களில் இருந்து சிறப்புக்குழு அமைத்து சிவகாசி பகுதியில் ஆய்வு செய்கின்றனர். இதில், ஒரு வாகனத்திற்கு 2 வணிகவரித்துறை அதிகாரிகள், ஒரு ஓட்டுநர் வீதம் 3பேர் வீதம் 4 வாகனங்களில் ஆய்வு செய்கிறார்கள்.

அப்போது, முறையாக பில் போட்டு சரக்கு ஏற்றி வரும் வாகனங்களையும் ஆய்வு என்கிற பேரில் நீண்ட நேரம் நிறுத்தி காக்க வைக்கின்றனர். அதேபோல், பில் இல்லாமல் பட்டாசு ஏற்றி வரும் வாகனங்களில் குறிப்பிட்ட அளவு வசூல் செய்து கொண்டு அனுப்புகின்றனர். அந்த வாகனங்களுக்கு அபராதம் எதுவும் விதிக்காமல், பெயரளவிற்கு ரசீது மட்டும் போட்டு அனுப்புகின்றனர்.

Advertisement

இதேபோல், சிவகாசி பகுதியில் உள்ள வணிகவரித்துறை அதிகாரிகளும் முறைகேடாக வசூலிக்கின்றனர். இதில், வெம்பக்கோட்டை பகுதி கிராமங்களில் எவ்வித அனுமதியின்றியும் பட்டாசு தயாரித்து விற்பனைக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு குறிப்பிட்ட தொகை வசூலித்துக் கொண்டு அனுப்புகின்றனர்.  இதேபோல், சாத்தூர் சாலை, வெம்பக்கோட்டை சாலை, விருதுநகர் சாலை, ஸ்ரீவில்லிபுத்தூர் சாலைகளில் ஆய்வு செய்கின்றனர். இதுபோன்ற காரணங்களால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அதனால், இப்பகுதியில் ஆய்வில் ஈடுபடும் வணிகவரித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வணிகவரித்துறை இணை ஆணையாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.