டி.டி.வி தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு ஒத்திவைப்பு!
அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கை நாளைக்கு ஒத்திவைத்து ..
சென்னை: அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கை நாளைக்கு ஒத்திவைத்து எழும்பூர் பெருநகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் மீது அமலாக்கத்துறை கடந்த 1994-ஆம் ஆண்டு அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக இரண்டு வழக்குகள் தொடர்ந்தது. அந்த வழக்கில் இருந்து தினகரனை விடுவித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அத்துடன் வழக்கு விசாரணையை தினமும் நடத்த வேண்டும் என்றும் எழும்பூர் பெருநகர நீதிமன்றதிற்கு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதிஇடைத்தேர்தலில் தான் போட்டியிடுவதால் தேர்தல் முடியும் வரை வழக்கு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று எழும்பூர் பெருநகர நீதிமன்றத்தில் தினகரன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தினகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
இதனிடையே தினகரன் மீதான வழக்கு எழும்பூர் பெருநகர நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தங்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல் முறையீடு நாளை விசாரணைக்கு வர உள்ளதால், வழக்கு விசாரணையை நாளை வரை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை நாளை வரை ஒத்தி வைத்து உத்தரவிட்டது.