முகப்பு
தமிழ்நாடு

சிவப்பு சுழல் விளக்கை அகற்றினார் முதல்வர்

பிரதமர் மோடியின் உத்தரவையடுத்து, தனது காரில் இருந்த சிவப்பு சுழல் விளக்கினை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை அகற்றினார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:20 PM
தனது காரின் சுழல் விளக்கை அகற்றும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
பகிர்:

பிரதமர் மோடியின் உத்தரவையடுத்து, தனது காரில் இருந்த சிவப்பு சுழல் விளக்கினை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை அகற்றினார்.
தலைமைச் செயலகத்துக்கு காலையில் வந்த முதல்வர், 11.42 மணிக்கு, தனது காரில் பொருத்தப்பட்டிருந்த சுழல் விளக்கை அவரே அகற்றினார்.
இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அமைச்சர்கள், முதல்வர்கள், பிற துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் அனைவரும் தங்கள் கார்களில் வைக்கப்பட்டுள்ள சிவப்பு சுழல் விளக்குகளை அகற்ற வேண்டுமென பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி, எனது காரில் பொருத்தப்பட்டுள்ள சிவப்பு சுழல் விளக்கை அகற்றியுள்ளேன். அமைச்சர்களும் தங்களது கார்களில் இருக்கக்கூடிய சிவப்பு சுழல் விளக்குகளை அகற்றுவார்கள்.
இதைத்தொடர்ந்து, தமிழகத்திலுள்ள உயர் அதிகாரிகளுடைய கார்களில் பொருத்தப்பட்டுள்ள வண்ண சுழல் விளக்குகளும் அகற்றப்படும்.
குடிநீர் பிரச்னை: தமிழக அரசைப் பொருத்த வரையில் குடிநீர் பிரச்னைக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறது. இந்தப் பிரச்னையை தீர்ப்பதற்குத் தேவையான நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
உள்ளாட்சி அமைப்பின் மூலமாக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கூடுதலாக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.
தமிழகத்தில் இருக்கும் ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட குடிமராமத்துப் பணிகள் தொடங்கப்பட்டு அந்தப் பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. குடிமராமத்து பணிக்கு மேலும் ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்தப் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன என்று எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →