சசிகலா புகைப்படங்கள் அடங்கிய பேனர்களை அகற்றுக: மதுசூதனன் வலியுறுத்தல்
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள சசிகலாவின் புகைப்படங்கள் இடம்பெறும் பேனர்களை அகற்றுமாறு ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மதுசூதனன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள சசிகலாவின் புகைப்படங்கள் இடம்பெறும் பேனர்களை அகற்றுமாறு ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மதுசூதனன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவினால் ஏற்பட்ட துயரம் தமிழக மக்களின் இதயத்தைவிட்டு இன்றும் அகலவில்லை. அவரது மர்ம மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும், கழகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற விசுவாசத் தொண்டர்களின் குரல்தான், தமிழக மக்களின் குரல்தான் நாங்கள் தொடங்கியிருக்கும் தர்மயுத்தத்தின் குரல்.
விசுவாசத் தொண்டர்களின், தமிழக மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் அந்த தர்மயுத்தத்தின் வீரியத்தைக் குறைப்பதற்கு சிலர் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தர்மயுத்தத்தின் வீரியம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
சசிகலாவின் புகைப்படங்களை அதிமுக தலைமைக் கழகத்திலிருந்து உடனே அகற்றி அதன் புனிதத்தை காப்பாற்ற வேண்டும் என்று விசுவாசத் தொண்டர்களின் சார்பாகவும், தமிழக மக்களின் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறேன்" என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் இரு அணிகளும் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்துள்ள நிலையில், சசிகலா பேனர்களை அகற்றுமாறு ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மதுசூதனன், எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு இந்த அறிக்கையை அனுப்பியுள்ளார்.