அதிமுக-வை இணைக்க ஆகஸ்ட் 14 முதல் சுற்றுப்பயணம்: டிடிவி தினகரன் அறிவிப்பு
ஆகஸ்ட் 14-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அஇஅதிமுக-வை இணைக்கும் முயற்சியில் ஈடுபடப்போவதாக டிடிவி தினகரன்வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
அதிமுக அம்மா அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான புரட்சித் தலைவி அம்மா அணியும் இணைவதற்கு 60 நாட்கள் காலஅவகாசம் அளித்து தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.
இதையடுத்து அதிமுக அணிகள் இணைவதற்கான அந்த காலக்கெடு வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது. இந்நிலையில், தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டார்.
ஆகஸ்ட் 14-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அஇஅதிமுக-வை இணைக்கும் முயற்சியில் ஈடுபடப்போவதாக டிடிவி தினகரன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
அதில் அவர் கூறியதாவது:
ஆஇஅதிமுக சார்பாக எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க உள்ளேன். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி மாவட்ட வாரியாக பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறேன். ஆகஸ்ட் 14 முதல் தமிழகம் முழுவதும் இந்த சுற்றுப்பயணத்தை தொடங்குகிறேன்.
முதல்கட்டமாக 9 இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறேன். ஆகஸ்ட் 14-ம் தேதி மதுரை மேலூரில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்குகிறேன். பின்னர் ஆகஸ்ட் 23-ந் தேதி வடசென்னை, ஆகஸ்ட் 29-ந் தேதி தேனி நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்கிறேன்.
இதன்பின்னர் செப்டம்பர் 5-ந் தேதி கரூர், செப்டம்பர் 12-ந் தேதி தஞ்சை, செப்டம்பர் 23-ந் தேதி நெல்லை மற்றும் செப்டம்பர் 26-ந் தேதி தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் நடைபெறவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதாக இருந்தது.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா ஒப்புதலோடு அஇஅதிமுக-வை இணைக்கும் முயற்சியில் ஈடுபடப்போவதாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.
இந்நிலையில், அதிமுக அம்மா அணியின் நிர்வாகிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். கொள்கைப்பரப்புத் துணைச்செயலாளராக நாஞ்சில் சம்பத் மீ்ண்டும்நியமிக்கப்பட்டார்.
பி.பழனியப்பன், செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாசலம், முக்கூர் சுப்பிரமணியன், மாதவரம் வி.மூர்த்தி உள்ளிட்டோர் புதிய அமைப்புச் செயலாளர்களாக நியமித்து டிடிவி தினகரன் உத்தரவு.