ஜெயலலிதா மரணம்: சிபிஐ விசாரணை கோரிய சசிகலா புஷ்பாவின் மனு தள்ளுபடி
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
புது தில்லி: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 75 நாட்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டும், அவர் சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார்.
அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா மற்றும் தெலுங்கு யுவா சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாலி நாரிமன் மற்றும் பினாக்கி சந்திரகோஷ் ஆகியோர் விசாரித்தனர்.
விசாரணையின் போது, இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது என்று தெலுங்கு யுவா சங்கம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கூறினார்.
இதனைக் கேட்ட நீதிபதிகள், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரும் வழக்கை சென்னை உயர் நீதிமன்றமே விசாரிக்கட்டும். உச்ச நீதிமன்றத்தில் விசாரித்த இந்த மனுவில் எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.