மக்களின் உணர்வுக்கு மதிப்பளிப்போம்; தீபாவுக்கு துணையாக இருப்பேன்: அதிமுக தொண்டர்களிடம் கணவர் உறுதி
தீபாவை அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி வரும் மக்களின் உணர்வுக்கு நிச்சயம் மதிப்பளிப்போம் என்று தீபாவின் கணவர் மாதவன் கூறியுள்ளார்.
சென்னை: தீபாவை அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி வரும் மக்களின் உணர்வுக்கு நிச்சயம் மதிப்பளிப்போம் என்று தீபாவின் கணவர் மாதவன் கூறியுள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏராளமான அதிமுக தொண்டர்கள், தி.நகர் சிவஞானம் தெருவில் வசித்து வரும் அவரது அண்ணன் மகள் தீபா வீட்டின் முன்பு தினந்தோறும் குவிந்து வருகிறார்கள்.
தீபா வீட்டின் முன்பு ஒரு வருகைப் பதிவேடும் வைக்கப்பட்டுள்ளது. அதில், வீட்டுக்கு வரும் அதிமுக தொண்டர்கள், தீபாவை அரசியலுக்கு வருமாறு கூறி கையெழுத்திட்டு செல்கிறார்கள்.
இந்த நிலையில், நேற்று தீபா வீட்டில் இல்லாததால், வீட்டின் முன்பு திரண்டிருந்த அதிமுக தொண்டர்களை, தீபாவின் கணவர் மாதவன் சந்தித்துப் பேசினார்.
மாதவனைப் பார்த்ததும், அதிமுக தொண்டர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். பெண் தொண்டர்கள் பலரும், மாதவனின் கையைப் பிடித்துக் கொண்டு, கண்ணீர் மல்க பேசினர். எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கட்சிக்காக உழைத்து வருகிறோம். தீபாவை பார்க்கும் போது ஜெயலலிதாவைப் பார்ப்பது போலவே உள்ளது. யாருக்காகவும் பயப்பட வேண்டாம். தயங்காமல் அரசியலுக்கு வாருங்கள். நாங்கள் மட்டும் அல்ல, ஏராளமான பொது மக்களுக்கும் உங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று கூறினர்.
எல்லாவற்றையு பொறுமையாகக் கேட்டுக் கொண்ட மாதவன், உங்கள் உணர்வுகளுக்கு தீபா நிச்சயம் மதிப்பளிப்பார். அவருக்கு நான் நிச்சயம் துணையாக இருப்பேன் என்று அதிமுக தொண்டர்களிடையே கூறினார்.