எம்.ஜி.ஆர். நினைவு சிறப்பு தபால் தலை வெளியீடு : தமிழக அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு சம்மதம்!
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மறைந்த முன்னாள் முதல்வர் எம்,ஜி.ஆர் அவர்களின் நூறாவது பிறந்த நாளை சிறப்பிக்கும் பொருட்டு சிறப்பு தபால் தலை வெளியிடப்படும்...
புதுதில்லி: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மறைந்த முன்னாள் முதல்வர் எம்,ஜி.ஆர் அவர்களின் நூறாவது பிறந்த நாளை சிறப்பிக்கும் பொருட்டு சிறப்பு தபால் தலை வெளியிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்தநாள் வரும் 17-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை ஒட்டி மத்திய அரசு சிறப்பு நாணயம் மற்றும் தபால் தலை வெளியிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடந்த 6-ம் தேதி கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று எம்.ஜி.ஆர் நினைவாக சிறப்பு தபால் தலை வெளியிட பிரதமர் உடனடியாக சம்மதம் தெரிவித்துள்ளார் என்றும், தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடியிடம் முதல்வர் பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்து கொண்டதாகவும் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.