ஜல்லிக்கட்டு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்!
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் புதிய கேவியட் மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
புதுதில்லி: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் புதிய கேவியட் மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் எழுச்சி மிகு போராட்டங்களுக்குப் பிறகு தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டத்தை நேற்று மாலை பிறப்பித்தது. தற்போது ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
ஆனால் போராட்ட களத்தில் உள்ள மாணவர்கள், இளைஞர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு நிரந்தர தீர்வுதான் வேண்டும் என்று கூறி தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
Advertisement
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதன்படி ஜல்லிக்கட்டு தொடர்பாக யார் வழக்கு தொடர்ந்தாலும் அந்த வழக்கு குறித்து தமிழக அரசின் கருத்தை கேட்க வேண்டும். தமிழக அரசின் கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து ‘பீட்டா’ போன்ற அமைப்புகள் வழக்கு தொடர வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.