கர்நாடகம் திறந்துவிடும் தண்ணீர் இன்று இரவு தமிழகம் வரலாம்
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட்டுள்ளதைத் தொடர்ந்து, அந்தத் தண்ணீர் செவ்வாய்க்கிழமை (ஜூலை 4) இரவு தமிழக எல்லையை வந்தடையலாம்
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட்டுள்ளதைத் தொடர்ந்து, அந்தத் தண்ணீர் செவ்வாய்க்கிழமை (ஜூலை 4) இரவு தமிழக எல்லையை வந்தடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர் வறட்சி காரணமாக சுமார் இரு மாதங்களாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வற்றி காணப்பட்ட காவிரி, கடந்த சில நாள்களாக பெய்துவரும் மழையால், தண்ணீர் ஓரளவுக்கு ஓடத் தொடங்கியுள்ளது.
தமிழக எல்லையான ஒகேனக்கல்லில் திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நொடிக்கு 120 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என கடந்த சில நாள்களாகவே மாண்டியா உள்ளிட்ட காவிரிப் பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருவதும் குறிப்பிடத்தக்து.
இந்த நிலையில், கபினியில் 3 ஆயிரம் கன அடியும், கேஎஸ்ஆர் அணையில் 3 ஆயிரம் கன அடியும் திறந்துவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்ட காலமாக வற்றிக் கிடந்த ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாலும், கர்நாடகப் பகுதிகளில் பாசனத்துக்குப் பயன்படுத்துவதாலும், இந்தத் தண்ணீர் முழுமையாக தமிழகத்துக்கு வரும் என நம்ப இயலாது என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 2 ஆயிரம் கன அடி வரை தமிழக எல்லைக்குள் வரலாம் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.