பினாமி ஆட்சிக்கு முடிவு கட்டப்படும்; விரைவில் ஜெயலலிதா ஆட்சி மீண்டும் மலரும்: ஓ.பன்னீர்செல்வம்
தமிழகத்தில் பினாமி ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டு விரைவில் ஜெயலலிதா ஆட்சி மீண்டும் மலரும் என்று ஓ.பன்னீர்செல்வம்
ராமநாதபுரம்: தமிழகத்தில் பினாமி ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டு விரைவில் ஜெயலலிதா ஆட்சி மீண்டும் மலரும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் சக்கரக்கோட்டை தொண்டிவாப்பா மைதானத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் செயல்வீரர்கள் கூட்டம் முன்னாள் அமைச்சர் எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், அதிமுக தற்போது இரு அணிகளாக பிரிந்திருப்பதன் மூலம் ஆட்சிக்கு வந்து விடலாம் என மு.க.ஸ்டாலின் நினைப்பது பலிக்காது. அதிமுக தொண்டர்களை குழப்ப வேண்டும் என்பதற்காகவே தினசரி பல்வேறு வதந்திகளை பரப்பி வருகிறார்.
சட்டப்பேரவையில் திமுக ஒரு எதிர்க்கட்சியாகவே செயல்படவில்லை.
திமுகவும்,எடப்பாடி பழனிச்சாமி தரப்பும் இணைந்து ஒரு புதுக்கூட்டணியை, புதுமைக் கூட்டணியை உருவாக்கி செயல்படுகின்றனர். அதனால் தான் சட்டப் பேரவையில் மு.க.ஸ்டாலின் கேட்கும் கேள்விகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி திருப்தியில்லாத பதில்களைக் கூறினாலும் கண்டுகொள்வதில்லை.
எம்.ஜி.ஆர்.கட்சியில் தனது அண்ணன் உட்பட குடும்ப உறுப்பினர் யாரையும் கட்சிக்குள் அனுமதிக்கவில்லை. அதே போல ஜெயலலிதாவும் அவரது குடும்ப உறுப்பினர் யாரையும் கட்சிக்குள் அனுமதிக்கவில்லை. ஆனால் இப்போது ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட 16 பேரும் கட்சிக்குள் ஆதிக்கம் செலுத்த வந்து விட்டனர்.
கபட நாடகம் நடத்துகின்றனர் என்று தெரிந்து தான் இணைப்பு பேச்சுவார்த்தைக் குழுவை கலைத்தோம். இந்தநிலையில் தொண்டர்களை குழப்புவதற்காக விரைவில் இரு அணிகளும் இணையும் என்றும் தினம் தினம் புளுகுமூட்டைகளை சில அமைச்சர்கள் அவிழ்த்து விடுகின்றனர். ராவணனை அழிக்க ராமருக்கு அனுமனும், தோழர்களும் இருந்ததைப் போல தமிழக மக்களும், விசுவாசத் தொண்டர்களும் நமது அணியில் இருப்பதால் பினாமி ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டு விரைவில் ஜெயலலிதா ஆட்சி மீண்டும் மலரும் என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.