சசிகலா மீதான அந்நியச் செலாவணி வழக்கு: முன்கூட்டியே கேள்விகளை வழங்க எதிர்ப்பு
சசிகலா மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு விசாரணையில், முன்கூட்டியே கேள்விகளை வழங்க எதிர்ப்பு தெரிவித்து,
சசிகலா மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு விசாரணையில், முன்கூட்டியே கேள்விகளை வழங்க எதிர்ப்பு தெரிவித்து, அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது.இதுகுறித்த விவரம்:
ஜெ.ஜெ.டி.வி.க்கு அப்லிங்க் கருவிகளை வாடகைக்கு வாங்கியதில் அந்நிய செலாவணி சட்ட விதிகளை மீறியதாக அதிமுக பொதுச் செயலர் வி.கே.சசிகலா, அவரின் அக்கா மகன் பாஸ்கரன் ஆகியோர் மீது அமலாக்கத் துறை கடந்த 1996ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை, எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடைபெறுகிறது.
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவிடம், இந்த வழக்கின் விசாரணை வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துவிட்டது.
இந்நிலையில் சசிகலா தரப்பு வழக்குரைஞர்கள், அமலாக்கத் துறை இந்த வழக்கு விசாரணையின்போது கேட்கும் கேள்விகளை முன்கூட்டியே தங்களுக்கு அளிக்க வேண்டும் என கடந்த மே மாதம் 18-ஆம் தேதி மனு தாக்கல் செய்தனர். இந்த மனு தொடர்பான பதில் மனுவை அமலாக்கத் துறையினர் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், விசாரணையின்போது முன்கூட்டியே நாங்கள் கேட்கக் கூடிய கேள்விகளை சட்டப்படி வழங்க முடியாது. எதிர்தரப்பு இதுதொடர்பாக தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து நீதித்துறை நடுவர் ஜாகீர் உசேன், வழக்கின் விசாரணையை இம் மாதம் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததோடு, அன்றைய தினம் சசிகலா தரப்பு, அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுக்கு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.