சென்னையில் மெட்ரோ பணியால் பூமிக்கடியில் பொங்கி வரும் ரசாயன கலவை!
சென்னை ராயபுரத்தில் மெட்ரோ பணியால் வீடுகளில் ரசாயன கலவை நுரை பொங்கி வருகிறது.
சென்னை: சென்னை ராயபுரத்தில் மெட்ரோ பணியால் வீடுகளில் ரசாயன கலவை நுரை பொங்கி வருகிறது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையிலிருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9.5 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி நடந்துவருகிறது. இதில், பழைய வண்ணாரப்பேட்டை தங்கசாலை மேம்பாலம் பகுதியிலிருந்து தண்டையார்பேட்டை வரையில் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இதற்கான பணி நடந்துவருகிறது.
இந்நிலையில், இன்று சென்னை ராயபுரம் மேற்கு கல்லறை சாலை பகுதியில் உள்ள வீடுகளில் ஒன்றில் இன்று காலை 4.30 மணி அளவில் வீட்டுக்குள் இருந்து பயங்கர சத்தத்துடன் பள்ளம் ஏற்பட்டு பூமிக்கடியில் இருந்து சிமெண்ட் கலவையோடு சேர்ந்த ரசாயன கலவை நுரை பொங்கி வெளியே வந்தது
இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே வந்தனர். இதையடுத்து மெட்ரோ பணியால் வீடுகளில் இருந்து வீதிக்கு வந்த ரசாயன கலவை நுரையை அகற்றும் பணியில் மெட்ரோ ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதி மக்களிடையே அதிரிச்சியும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் போது ஏற்பட்ட சத்தத்தை கேட்டு அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்மணி நினைவிழந்த நிலையில் மயங்கி விழுந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.